பெண்ணுக்கு கிடைத்தது 2 ஆண்டு உரிமை தொகை

கோவை: கோவை பெண்ணுக்கு, நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, இரண்டு ஆண்டுக்கான மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, 50. கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு உரிமைத்தொகை வரவில்லை.

தொடர்ந்து, 2025 ஜூலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மீண்டும் விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், மகேஸ்வரி ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை பெற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.

அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி, தன் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, அவரது ஆதார் கார்டுடன் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சாந்திதேவி என்பவரது வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளதும், அப்பெண்ணின் வங்கி கணக்குக்கு பணம் செல்வதும் தெ ரிந்தது.

அதன்பின், மகளிர் உரிமைத் தொகை பணத்தை தன் வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொடுக்க வேண்டும் என, பொள்ளாச்சி சப் – கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் மனு அளித்தார்.

இது பற்றி, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியாக, மகேஸ்வரியின் வங்கி கணக்கில், மகளிர் உரிமைத்தொகையாக 25,000 ரூபாய் நேற்று வரவு வைக்கப்பட்டது.

Source link