பெய்ரூட்: லெபனானுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள், ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் தாக்குதல்

பெய்ரூட்: லெபனானுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள், ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், குடியிருப்புகள் மீது வான்வழி தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளது.

கடந்த 2024ல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது மட்டுமின்றி, எல்லையை ஒட்டியுள்ள லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து செயல்படும் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. இந்நிலையில், ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் மீண்டும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை துவங்கியது. தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹோட்டல் மற்றும் கிழக்கு லெபனானின் பால்பெக் நகரில் உள்ள குடியிருப்பு வளாகம் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. நான்கு பேர் கொல்லப்பட்டனர்; ஆறு பேர் காயமடைந்தனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, தெற்கு லெபனானில் உள்ள 13 கிராமங்கள் மற்றும் நகரங்களை காலி செய்ய இஸ்ரேல் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இங்கு விரைவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் படைகள் தற்போது லெபனானுக்குள் நுழைந்து தரைவழி தாக்குதலையும் துவங்கியுள்ளது.

ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளுக்கு லெபனான் அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும், போதிய பலம் இல்லாததால், லெபனான் ராணுவத்தில், ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த முடியவில்லை.

Source link