நமது நிருபர்
பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு ஏற்கப்பட்டது. இன்று மாலை வரை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச் 30ம் தேதி துவங்கியது. அரசு விடுமுறை நாட்கள் போக, நேற்றுடன் சேர்த்து 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதன் மூலம் சட்டசபை தேர்தலுக்கான போட்டியில் 7,400க்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
சென்னையில் மட்டும் 16 தொகுதிகளில் 628 மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 07) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடந்து வருகிறது. பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு ஏற்கப்பட்டது. இந்த தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து மொத்தம் 66 பேர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதேபோல் கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி, சாத்தூரில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்தின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
விஜய் வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். துணை முதல்வர் உதயநிதி வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா வேட்புமனு பரிசீலனை, சுயேச்சை வேட்பாளர் ஆட்சேபத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.
தர்மபுரியில் பாமக சார்பில் போட்டியிடும் சவுமியா அன்புமணி வேட்புமனு ஏற்கப்பட்டது. வேட்புமனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
