கரூர்: “பேரழிவைத் தடுத்து நிறுத்த நாங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால், நாங்கள் உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை உள்வாங்கி, அவர்கள் எண்ணங்களைப் பிரதிபலித்தோம். அவர்களைக் கைவிட்டு விடவில்லை என்கிற திருப்தி மட்டுமே எஞ்சியுள்ளது” என காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் குறித்து கரூர் எம்.பி. ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 12 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் மீதமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் மனக் குமுறலையும், கொந்தளிப்பையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வேட்பாளர்கள் முன்பே முடிவு செய்யப்பட்டு, அதற்கேற்ப தொகுதிகள் கேட்டு வாங்கப்பட்டுள்ளன.
நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றி, வருகிற, தகுதியும், மக்கள் செல்வாக்கும், வெற்றி வாய்ப்பும் உள்ள பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அது வேதனையளிக்கிறது.
