பொன்முடி மீதான செம்மண் குவாரி ஊழல் வழக்கு: ஏப்.,2 ல் தீர்ப்பு

விழுப்புரம்: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி ஊழல் வழக்கில், ஏப்ரல் 2ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் கடந்த திமுக ஆட்சியின் போது விதிமுறை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடியே 36 லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012 ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை அக்., வரை நடந்தது. 57 சாட்சிகளிடம் விசாரித்ததில் 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், ஏப்.,2ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி மணிமொழி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பொன்முடி மீதான வழக்கில் தீர்ப்பு அனைவரின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link