மும்பை: ”லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் முதிர்ச்சியற்றவர். அவருக்கு பொருளாதாரம் குறித்து அடிப்படை புரிதலே இல்லை,” என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய வர்த்தக அமைச்சருமான பியுஷ் கோயல் குற்றஞ்சாட்டினார்.
இந்தியா – அமெரிக்கா இடையே சமீபத்தில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டது. இது குறித்தும், மத்திய பட்ஜெட் குறித்தும் காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் சரமாரியாக விமர்சித்து வருகிறார்.
இதற்கு பதிலடி கொடுத்து, மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று கூறியதாவது:
விரக்தியில் இருப்பதால், தவறான தகவல்களை மட்டுமே காங்., பரப்பி வருகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி போன்ற எதிர்க்கட்சிகள், எந்த முயற்சி செய்தாலும், பிரதமர் மோடியின் மக்கள் சேவையை தடுத்து நிறுத்த முடியாது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பொய் மட்டுமே பேசி வருகிறார். அவருக்கு பொருளாதாரம் குறித்து எதுவுமே தெரியாது. அடிப்படை கூட தெரியாமல், சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.
நாட்டின் மொத்த ஏற்றுமதியில் ஜவுளித் துறை மட்டும், 3.60 லட்சம் கோடி ரூபாய் பங்களிக்கிறது. இது வரும் காலங்களில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கும். அமெரிக்கா ஆண்டுதோறும், 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளிப் பொருட்களை கொள்முதல் செய்கிறது.
நம் பொருட்கள் மீதான பரஸ்பர வரி, முன்பு 50 சதவீதமாக இருந்தது, தற்போது 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சீனா, வியட்நாம், பாக்., போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இது குறைவு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
