போடிநாயக்கனூர்: அதிமுகவில் இருந்து நான் விலகவில்லை. அவர்கள் தான் என் மீது தண்ணீர் பாட்டிலை வீசி எறிந்து

போடிநாயக்கனூர்: அதிமுகவில் இருந்து நான் விலகவில்லை. அவர்கள் தான் என் மீது தண்ணீர் பாட்டிலை வீசி எறிந்து வெளியேற்றினர் என்று போடிநாயக்கனூர் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ் கூறி உள்ளார்.

போடி நாயக்கனூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஓபிஎஸ், இன்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;

போடி சட்டசபை தொகுதியில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக நான் மனு தாக்கல் செய்துள்ளேன். தமிழகம் முழுவதும் உள்ள இந்த கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். இதே தொகுதியில் நான் 3 முறை வென்றுள்ளேன். மக்களுக்கு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியவன்.

அதிமுகவில் இருந்து நான் எங்கே போனேன். அவர்கள் தான் என்னை விரட்டிவிட்டனர். தண்ணீர் பாட்டிலை கொண்டு எறிந்து வெளியேற்றியது யார்? 50 ஆண்டுகால அரசியல் வாழ்வு, 25 ஆண்டு கால சட்டமன்ற உறுப்பினர், 5 ஆண்டுகால நகர்மன்ற தலைவர் இப்படி பல பதவிகளில் இருந்துள்ளேன். பொறுப்பேற்ற பதவிக்கு ஏற்ற கடமையை, பணியை செய்திருக்கிறேன் என்ற மனநிறைவுடன் இருக்கிறேன்.

மக்களின் ஆதரவுடன் தான் பிரதிநிதிகள் செயலாற்றவேண்டும். இபிஎஸ் கட்சிக்கு வந்த வழி தவறான வழி. அவரை முதல்வராக நியமனம் செய்தது சசிகலா. ஆனால் அவரையே சூரியனை பார்த்து ஏதோ குரைக்கிறது என்று சொன்னார். நன்றி உணர்வு இல்லாத மனிதர், கட்சிக்கு பொதுச் செயலாளர். இன்று வரை இல்லை, என்றும் தோல்வியை சந்திக்கும். அவர் (இபிஎஸ்) நிரந்தர பொதுச் செயலாளர் கிடையாது. இது தொடர்பாக 6 வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது.

இவ்வாறு ஓபிஎஸ் பேட்டி அளித்தார்.

Source link