மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ போதைப்பொருள் மன்னன், எல் மெஞ்சோ சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுதும் வன்முறையில் ஈடுபட்டனர்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், பல போதைப்பொருள் கடத்தல் கும்பல் இருந்தாலும், இரு அமைப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.
இ வை அரசுக்கே சவால் விடும் வகையில் பலம் உடையவையாக திகழ்கின்றன. இதில் ஒன்று சி.ஜே.என்.ஜி., எனும் ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்’ என்ற அமைப்பாகும்.
அதிரடி நடவடிக்கை
இந்த அமைப்பின் தலைவனான ‘எல் மெஞ்சோ’ என அழைக்கப்படும் நெமேசியோ ஓசெகுவேரா செர்வாண்டஸ், 59, மெக்சி கோ ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு மெக்சிகோவில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும், அவர்களை கட்டுப்படுத்தவும் மெக்சிகோ அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.
இதை யடுத்து, மெக்சிகோ ராணுவ அமைச்சகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
சிறப்பு படைகள் மற்றும் விமானப்படையின் உதவியுடன் எல் மெஞ்சோவை கைது செய்ய, ராணுவம் தேடுதல் வேட்டையை துவக்கியது .
இதில் எல் மெஞ்சோ, மெக்சிகோவின் ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள தபால்பா நகரில் பதுங்கியிருப்பதை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர்.
எல் மெஞ்சோவை ராணுவம், நேற்று முன்தினம் இரவு சுற்றி வளைத்தது. அப்போது, சி.ஜே.என்.ஜி., அமைப்புக்கும், பாதுகாப்பு படையினருக்கு இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், எல் மெஞ்சோ உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர் .
காயமடைந்த எல் மெஞ்சோ மற்றும் இருவரை பாதுகாப்புப் படையினர் மீட்டு, மெக்சிகோ சிட்டி நகருக்கு விமானம் வாயிலாக கொண்டு சென்ற போது, வழியிலேயே எல் மெஞ்சோ உயிரிழந்தார். இம்மோதலில் மூன்று பாதுகாப்புப் படை வீரர்களும் காயமடைந்தனர்.
சம்பவ இடத்தில் இருந்து ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட கனரக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை ராணுவ வாகனங்களை அழிக்கும் மற்றும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு
தங்கள் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததும், சி.ஜே.என்.ஜி., அமைப்பினர் நாடு முழுதும் வன்முறையில் இறங்கினர்.
வன்முறையை அடுத்து, ஜாலிஸ்கோ மாகாண கவர்னர் பொது போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தினார். அண்டை நாடான குவாத்தமாலாவும் தன் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷை ன்பாம், அந்நாட்டு மக்களை அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தாலும் பாதுகாப்பு படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து மாகாண அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் உறுதி அளித்தார்.
