போபால்: மத்திய பிரதேசத்தில் நான்கு மாடி ஹோட்டல் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஏழு பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம், அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்மா நகரில் நான்கு மாடி கட்டடத்தில் தங்கும் விடுதி ஒன்று இயங்கி வந்தது. இந்த கட்டடம் நேற்று மாலை 6:00 மணியளவில் பலத்த சத்ததுடன் இடிந்து விழுந்தது.
இதில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ஏழு பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கிரேன் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கடைக்காரர் ஒருவர் கூறுகையில், ‘ஹோட்டல் கட்டடம் அருகே பழைய கட்டடம் ஒன்று இடிக்கப்பட்டு, அங்கு புதிய கட்டிடம் அமைக்க ஆழமான குழி தோண்டப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஹோட்டல் கட்டடத்தின் அடித்தளம் பாதிக்கப்பட்டிருக்கலாம். முதலில் கட்டடத்தின் ஒரு பகுதி சாய்ந்து பின் முற்றிலும் இடிந்து விழுந்தது’ என்றார்.
