போர் சூழலை பயன்படுத்தி மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகள்: கேரளாவில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

கொச்சி: ”மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவும் நிலையில், அதை பயன்படுத்தி, காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்துகின்றன. அக்கட்சிகளிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

நேரடி போட்டி இங்கு, அடுத்த மாதம் தமிழகத்துடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் கூட்டணிக்கும், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த சூழலில், கேரளாவுக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, எர்ணாகுளம் மாவட்டத்தின் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில், 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார். தொடர்ந்து, எர்ணாகுளத்தில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:

மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்த இக்கட்டான தருணத்தில், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆனால், இந்த நேரத்திலும் எதிர்க்கட்சிகள் அரசியலில் ஈடுபடுகின்றன.

எங்களது கடமை போர் பதற்றத்தை பயன்படுத்தி, நாட்டு மக்களிடையே காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் பீதியை ஏற்படுத்துகின்றன. இந்த கட்சிகளிடம் மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மேற்காசிய நாடுகளில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்களது கடமை. என் அரசு ஒரு இந்தியரை கூட பாதுகாப்பற்ற நிலையில் விடாது. சவாலான காலங்களில் எரிசக்தி மற்றும் பிற துறைகளில் நம் நாடு தற்சார்பு அடைய அரசு பாடுபட்டு வருகிறது. உலகளாவிய நிச்சயமற்றத் தன்மைக்கு மத்தியிலும் நம் நாடு சுயசார்பில் இருக்க முயற்சி செய்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

சர்ச்சை

கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில், தலப்பாடி- – செங்கலா, வெங்களம் — ராமனட்டுக்காரா ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, கேரள பொதுப்பணித் துறை அமைச்சர் பி.ஏ.முகமது ரியாசுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால், அந்நிகழ்ச்சியை முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் புறக்கணித்தனர். இதையடுத்து, வெங்களம் — ராமனட்டுக்காரா பிரிவில், கேரள அரசு சார்பில் தனியாக ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது, அம்மாநில அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

ரூ.10,000 கோடி திட்டங்கள்கேரளாவில் துவக்கி வைப்பு

சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள கேரளாவில், 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். கொச்சியில் உள்ள, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையத்தில், 5,500 கோடி ரூபாய் மதிப்பிலான, ‘பாலிப்ரோப்பிலீன்’ உற்பத்தி பிரிவிற்கு அவர் அடிக்கல் நாட்டினார். த லா, 2,000 கோடி ரூபாய்க்கும் அதிக செலவில் கட்டி முடிக்கப்பட்ட தலப்பாடி – செங்கலா பிரிவு, வெங்களம் – ராமனட்டுக்காரா வரையிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அவர் திறந்து வைத்தார். ரயில்வே துறையில், 142 கோடி ரூபாய் மதிப்பிலா ன திட்டங்களையும் அவர் துவக்கி வைத்தார். அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட, ஷொர்ணுார் சந்திப்பு, குட்டிப்புரம், சங்கனாச்சேரி ஆகிய மூன்று ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 52 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட இந்த நிலையங்களில், நவீன வசதிகள், சிறந்த நடைபாதைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான எளிதான அணுகல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர, கொல்லம் மாவட்டம் மேற்கு கல்லடாவில், 50 மெகாவாட் மிதக்கும் சூரிய சக்தி திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

பாலக்காடு –

பொள்ளாச்சி

ரயில் சேவை

கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பாலக்காடு — பொள்ளாச்சி இடையிலான ரயில் சேவையை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக துவக்கி வைத்தார். வாரத்தில், 5 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில், பாலக்காடு டவுன், புதுநகரம், கொல்லங்கோடு, முதலமடை, மீனாட்சிபுரம் மற்றும் ஆனைமலை ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும். மாலை, 6:45 மணிக்கு பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில் புறப்பட்டு, இரவு, 9:10-க்கு பொள்ளாச்சி சென்றடையும். காலை, 5:15 மணிக்கு பொள்ளாச்சி சந்திப்பிலிருந்து புறப்பட்டு, 7:00 மணிக்கு பாலக்காடு சந்திப்பை வந்தடையும். இந்த ரயில் சேவை எதிர்காலத்தில், பழநி வரை நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link