துபாய்: போரால் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்கள், தங்குவதற்கு வசதியாக துபாயில் உள்ள இந்திய தொழிலதிபர் ஒருவர் இலவச தங்குமிடம், உணவு கொடுத்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்துள்ளன. இதில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அதன் பின்னர் ஈரானும், மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஹோட்டல் முன்பதிவு முடிந்து விட்டதாலும் போக வழியில்லாமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், துபாயில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் ஒருவர் உதவிக்கரம் நீட்டியுள்ளார். ‘அல் மிசான்’ குழுமத்தின் தலைவர் யோகேஷ் தோஷி, தன்னுடைய, 64 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தை, தற்காலிக தங்குமிடமாக மாற்றியுள்ளார்.இந்த தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகிறது.
உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் வழங்கப்படுகின்றன. இந்த முயற்சி இந்திய மக்கள் மன்றம் மற்றும் துபாயில் உள்ள இந்திய துணைத் துாதரகத்துடன் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. பல பயணிகள் பணம் இல்லாமலோ அல்லது தங்க இடம் இல்லாமலோ இருந்த நிலையில் இங்கு உதவி கிடைத்துள்ளது.
இதே போன்று துபாயிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஜ்மானில், இந்திய தொழிலதிபர் திர் திரஜ் ஜெயின் என்பவரும் இதேபோன்ற உதவியை செய்து வருகிறார். ஹோட்டல்கள் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து சிக்கித் தவிக்கும் இந்திய பயணியரை அழைத்து வர, ஆறு ரோல்ஸ் ராய்ஸ் உட்பட, 11 கார்களையும் கொடுத்து திர் திரஜ் உதவியுள்ளார். இதனால் 125க்கும் மேற்பட்ட இந்தியர்கள், தற்காலிக தங்குமிடம் பெற்றுள்ளனர். போர் பதற்றத்துக்கு மத்தியில் அவரது இந்த மனிதநேய உதவி பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
