சென்னை: போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன், கவர்னர் ரவி வழியனுப்பி வைக்கப்பட்டார்.
பீஹார் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி ரவி, தமிழக கவர்னராக, 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். தன் பதவிக் காலத்தில், இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்தவர்களை பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் பலவற்றை முன்னெடுத்தார்.
மேலும், தான் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், இந்திய பாரம்பரியம், தமிழக கலாசாரம் ஆகியவற்றை போற்றி பேசினார். அதேநேரம், தமிழக அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் இடையே பனிப்போர் மூண்டது.
தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும், பல்கலை துணை வேந்தர்கள் நியமனம், சட்டசபை உரை, சட்ட மசோதாக்கள் என, பல விவகாரங்களில், அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை, கவர்னர் ரவி மேற்கொண்டார்.
இந்த சூழலில், மேற்கு வங்க கவர்னராக பதவி வகித்து வந்த சி.வி.ஆனந்த போஸ், ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தமிழக கவர்னர் ரவி, மேற்கு வங்க கவர்னராக மாற்றம் செய்யப்பட்டார். தமிழக கவர்னர் பதவியை, கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் கூடுதலாக கவனிக்க உள்ளார்.
இந்நிலையில், கவர்னர் ரவி, தன் குடும்பத்தினருடன் டில்லி சென்றார். அவரை வழியனுப்பும் விதமாக, சென்னை விமான நிலையத்தில், அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
