மதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸ் விசாரணையில் வாலிபர் மரணமடைந்ததாக கூறப்படும் சம்பவத்தில், விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி, டி.ஜி.பி., வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சீயோன் நகரை சேர்ந்த ஜெய குமார், 37, அழகர், 40, ஆகியோரை, மார்ச் 6ல், மர்ம நபர்கள் மூன்று பேர், அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றனர். திருப்புவனம் போலீசார் விசாரித்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் டெலிசன், 26, என்பவரும், அவரின் கூட்டாளிகளும் இதில் ஈடுபட்டது தெரியவந்தது.
மானாமதுரையில் பதுங்கி இருந்த ஆகாஷ் டெலிசனை, போலீசார் சுற்றி வளைத்த போது, அவர், பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றதால், காலில் படுகாயம் ஏற்பட்டது. அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மார்ச் 7ல் உயிரிழந்தார்.
போலீசார் அவரை அடித்து கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், ஆகாஷ் டெலிசன் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையே, மானாமதுரை ராஜேஷ் கண்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஆகாஷ் குடும்பத்திற்கு இழப்பீடு கேட்டும், வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றவும் கோரி மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஆர்.விஜய குமார் விசாரித்தார்.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், ”ஆகாஷ் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது மரண வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சிலர் மானாமதுரையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து பாதித்துள்ளது. இது ஏற்புடையதல்ல. கண்காணிப்பு கேமரா பதிவுகள் பாதுகாக்கப்படும்,” என்றார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மதுரை அரசு மருத்துவமனையில் முறைப்படி உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் உடன் இருக்க வேண்டும். பிரேத பரிசோதனை முடிந்ததும் மனுதாரர் தரப்பில் உடலை பெற்றுக் கொள்ள வேண்டும்.
மானாமதுரையில் மறியலில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு மனுதாரர் அறிவுறுத்த வேண்டும். விசாரணை மார்ச் 11க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
