தெலுங்கானாவில், சித்தியுடனான கள்ளக்காதலை திருமணத்துக்குப் பிறகு முறித்த இளைஞர் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காலனியைச் சேர்ந்த அஸ்லாம் கான் (28), ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவரது தாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அஸ்லாமின் தந்தை அன்வாரி பேகம் (41) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில், அஸ்லாம் கானுக்கும் அவரது சித்தி அன்வாரி பேகத்துக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த உறவு நீண்ட நாட்களாக தொடர்ந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த அஸ்லாம் கான், இனி கள்ளக்காதலை தொடர விரும்பவில்லை என்று பேகத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு பேகம் சம்மதிக்கவில்லை. திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக பணம் தருவதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், தனது முடிவில் உறுதியாக இருந்த அஸ்லாம் கான், உறவினரின் வீட்டில் தங்கி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பேகம், மகாராஷ்டிராவைச் சேர்ந்த கூலிப்படையினரை தொடர்புகொண்டு, ரூ.6 லட்சத்திற்கு அஸ்லாம் கானை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்காக ரூ.50 ஆயிரம் முன்பணமும் வழங்கியுள்ளார். இந்த திட்டத்தில் அவரது சகோதரரும் உடந்தையாக இருந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், ஜூலை 15-ஆம் தேதி கூலிப்படையினர் அஸ்லாம் கானை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்துள்ளனர். சித்தியுடனான கள்ளக்காதலை முறித்ததால் அரங்கேறிய இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி… ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரம்!
