புதுடில்லி: “நீதிமன்ற தீர்ப்புக்கு பின், அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை மிகைப்படுத்திக் கொள்கிறார். ஆனால், மக்களுக்கு உண்மை தெரியும்,” என, டில்லி சட்டத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கூறினார்.
டில்லி அரசின் 2021ன் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை நீதிமன்றம் நேற்று முன் தினம் விடுதலை செய்தது.
இந்நிலையில், டில்லி சட்ட அமைச்சர் கபில் மிஸ்ரா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
மதுபானக் கொள்கை வழக்கில் நீதிமன்றம் விடுவித்ததை அடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை மிகைப்படுத்திக் கொள்கிறார். ஆனால், டில்லி மக்களுக்கு உண்மை தெரியும். ஆட்சியில் இருந்த காலத்திலும் இதேபோன்று கெஜ்ரிவால் பல நாடகங்களை நடத்தியுள்ளார்.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மேல்முறையீடு செய்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்திலும் முறையிடலாம்.ஆனால், கெஜ்ரிவால் தன்னை சத்தியவான் என தனக்கு தானே கூறிக்கொள்கிறார்.
இந்த வழக்கு தொடர்ந்தவுடன் மதுபானக் கொள்கை திரும்பப் பெறப்பட்டது ஏன்? என கெஜ்ரிவால் இதுவரை பதில் அளிக்கவில்லை. நேர்மையான கொள்கையாக இருந்தால் அதை ஏன் திரும்ப பெற வேண்டும்?
இவ்வாறு அவர் கூறினார்.
