`மக்கள் திமுக அரசை தூக்கி எறிய விரும்புகிறார்கள்; NDA மட்டுமே…' – திருச்சியில் பிரதமர் மோடி உரை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் பரபரக்கிறது. தொடர்ந்து முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரமும் களத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் மாநாடு நடத்திய அடுத்த சில தினங்களில், பிரதமர் மோடி பங்கேற்ற மாநாடும் நடந்திருக்கிறது. திருச்சி பஞ்சப்பூரில் இன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, என்.டி.ஏ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உரைக்குப் பிறகு இறுதியாக உரையாற்றினார்.

அப்போது, “தமிழ் சகோதர சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்! நண்பர்களே, இந்த திருச்சிக்கு வந்திருப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த முறை தமிழகம் வந்த போது திருச்சி ஸ்ரீரங்கத்தில் அழகு கொஞ்சும் தமிழில் கம்பராமாயணத்தை கேட்டு மகிழ்ந்தேன்.. தமிழ்நாட்டின் புதல்வர் சிபி ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவர் ஆகியிருக்கிறார். வீரத்துக்கும் பெருமைக்கும் சொந்தமான மண் திருச்சி. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். திமுக அரசை தூக்கி எறிய மக்கள் விரும்புகிறார்கள். என்.டி.ஏ-வால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும் என மக்கள் நம்புகிறார்கள்.

திருச்சியில் பிரதமர் மோடி
திருச்சியில் பிரதமர் மோடி

இன்றைய நிகழ்ச்சி தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானது. தொடர்புடையது. தூய்மையான எரிசக்தி, பெட்ரோல் தொடர்பான தயாரிப்பு, நெடுஞ்சாலைகள், ரயில்வே துறை, ஊரகப் பகுதி சாலைகள் என 5,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்த திட்டங்கள் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவல்லது.

நண்பர்களே, சென்னையில் இருக்கும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மசகு எண்ணெய் கலவை ஆலை இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றது. உலகிலேயே மிகப்பெரிய ஆலைகளில் இதுவும் ஒன்று என்பது உங்களுக்குப் பெருமிதத்தை அளிக்கும். தமிழ்நாட்டிலும் சரி, மற்ற இடங்களிலும் சரி, இந்த ஆலை பல முக்கியமான தொழிற்சாலைகளின் தேவைகளை நிறைவேற்றி வைக்கின்றது. மசகு எண்ணெய்களின் உள்ளூர் மட்டத்திலான தயாரிப்பு அதிகரிப்பு, இறக்குமதிகளைக் குறைப்பதோடு தேசத்தின் பணத்தையும் சேமிக்கும்.

இன்று நாம் 370 கிலோமீட்டர்கள் நீளமுள்ள ஊரகப் பகுதி சாலைகளைத் தொடங்கி வைத்துள்ளோம். இந்தப் பணிகள் அனைத்தும் பிரதம மந்திரி ஊரகப் சாலைகள் திட்டப்படி போடப்பட்டிருக்கின்றன. இந்தச் சாலைகளால் நோயாளிகளுக்கு மேம்பட்ட மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன, மாணவர்கள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சிரமமின்றிப் பயணிக்க முடிகின்றது, விவசாயிகள் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தங்களுடைய விளைபொருட்களை விற்க முடிகின்றது. மொத்தத்தில் ஒவ்வொரு சாலையும் ஊரகப் பொருளாதாரத்தை உயர்த்தி, வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கின்றது.

நயினார் நாகேந்திரன் - டிடிவி தினகரன்
நயினார் நாகேந்திரன் – டிடிவி தினகரன்

நண்பர்களே, கடந்த ஆண்டு கங்கை கொண்ட சோழபுரம் வந்தது எனக்குச் சந்தோஷமாக இருந்தது. மாமன்னன் ராஜேந்திர சோழன் எழுப்பிய இந்த மகத்தான ஆலயத்தின் கட்டுமானத்தின் ஆயிரமாவது ஆண்டு தொடக்கத்தை நாம் கொண்டாடினோம். இது உலகெங்கிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது. இன்று நாம் அங்கே ஒரு முக்கியமான நெடுஞ்சாலைச் சுற்றிற்கான அடிக்கல்லை நாட்டி இருக்கின்றோம். புதியதொரு புறவழிச்சாலை அமைக்கப்படுவதால் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

கடந்த வாரம் நான் மதுரை வந்தபோது, எட்டு நவீன மறுவடிவமைக்கப்பட்ட ரயில் நிலையங்களைத் தொடங்கி வைத்தோம். இன்று பல புதிய ரயில் சேவைகளுக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கின்றது. இவை நாகர்கோவில், கோயம்புத்தூர், ராமேஸ்வரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, காரைக்குடி ஆகிய இடங்களை மற்ற பகுதிகளோடு இணைக்கின்றன. இந்த புதிய ரயில் சேவைகள் காரணமாகச் சுற்றுலாத்துறை அதிகரிப்பதோடு, உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்கப்பட்டு இளைஞர்களுக்குப் பல வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

மேம்பட்ட இந்தியாவை உருவாக்க, மேம்பட்டதொரு தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் எங்களுடைய இலக்கு. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு முழு அர்ப்பணிப்போடு மத்திய அரசு இருக்கின்றது. மாநிலத்தின் மேன்மைக்கு நாங்கள் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகின்றோம். இப்படி மேலும் தொடர்ந்து பாடுபடுவோம்.” என்றார்.

Source link