திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புகழ்பெற்ற மாட்டு சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
வழக்கமாக இந்த சந்தையில் வாரம்தோறும் சுமார் 10 கோடிக்கு மேல் விற்பனை நடைபெறும். நகராட்சி சார்பில் இந்த கால்நடை சந்தை குத்தகைக்கு விடப்படும் நிலையில் குத்தகைதாரர் கள் செவ்வாய்கிழமை தொடங்கி புதன் கிழமை வரை இரண்டு நாட்கள் சந்தை நடத்திய நிலையில் குத்தகைதாரர் நகராட்சி நிர்ணயித்ததைவிட பலமடங்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாக எழுந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் குத்தகையை கடந்த 15 ம்தேதி நகராட்சி நிர்வாகம் ரத்து செய்தது.
அதேபோல் நகராட்சியின் அதிகாரப்பூர்வ நாளான புதன்கிழமை மட்டுமே சந்தை நடைபெறும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி இன்று முதல் நகராட்சி நிர்வாகமே நேரடி வசூலில் ஈடுபட்டது. அரசு நிர்ணயத்திற்கு தொகையை மட்டுமே வசூலித்த நிலையில் மாடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தது.
இதே போல் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் இன்றைய சந்தையில் ஆடு மற்றும் மாடுகள் சுமார் 4 முதல் 6 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் சந்தையில் தண்ணீர் , மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனகூறும் வியாபாரிகள் அதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும், இப்போதுள்ளநடைமுறை போல் உரிய கட்டணம் மட்டுமே வசூல் செய்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மூலம் உரிய கட்டணம் வசூலிக்கப்படுவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
