மதம் மாறினால் பட்டியல் இன சலுகை கிடையாது; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடில்லி: ஹிந்து, சீக்கியர், பவுத்த மதங்களை சேர்ந்த பட்டியலின சமூகத்தினர், பிற மதத்துக்கு மாறினால், பட்டியல் இன சலுகைகள் மற்றும் உரிமைகளை பெற முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிந்தாதா ஆனந்த். இவர் ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறி மதப்போதகராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆந்திரா மாநில ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அவர், சில நபர்கள் என்னை தாக்கி, ஜாதி ரீதியிலான இழிசொற்களைப் பயன்படுத்தி தீட்டியதாக போலீசாரிடம் புகார் அளித்தார். குற்றவாளிகளை கைது செய்த போலீசார் அவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அக்கலா ராமி ரெட்டி, ஆனந்த் மதம் மாறிய நிலையில் அவர் எஸ்சி,எஸ்டி சட்டத்தைப் பயன்படுத்துவது சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல என வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்டு ஆந்திரா ஐகோர்ட், ”பட்டியலின மற்றும் பழங்குடியினர் சட்டமானது பாதுகாப்பு கட்டமைப்புகளுக்காக உருவாக்கப்பட்டது. வேறு மதத்திற்கு மாறுவதன் மூலம் அந்த பிரிவில் உள்ள சலுகைகளை ஒருவர் பயன்படுத்த முடியாது ” என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிந்தாதா ஆனந்த் சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று (மார்ச் 24) சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆந்திர ஐகோர்ட் தீர்ப்பை சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் உறுதி செய்தனர்.

ஹிந்து, சீக்கியர், பவுத்த மதங்களை சேர்ந்த பட்டியலின சமூகத்தினர், பிற மதத்துக்கு மாறினால், பட்டியல் இன சலுகைகள் மற்றும் உரிமைகளை பெற முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

* கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, அம்மதத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு தீவிரமாகப் பின்பற்றி வரும் ஒரு நபர், தொடர்ந்து பட்டியல் ஜாதிச் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினராக நீடிக்க முடியாது.

* மேல்முறையீட்டாளர் 10 ஆண்டு காலமாகத் தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வந்ததுடன், ஞாயிறு நேரப் பிரார்த்தனைகளை நடத்திவரும் ஒரு போதகராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

* ஹிந்து, சீக்கியம் அல்லது பவுத்த மதம் அல்லாத வேறு மதத்தைப் பின்பற்றும் ஒருவர் பட்டியல் ஜாதியினருக்குக் கிடைக்கும் அரசியலமைப்புப் பாதுகாப்புகளைக் கோர முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link