மதுரை: தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் போலீசார் 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு அளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு சாத்தான்குளத்தில் உள்ள வியாபாரி ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் விசாரணையின் போது கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கு, சிபிசிஐடி விசாரணையில் இருந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பால கிருஷ்ணன், ராகு கணேஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். சிபிஐ தரப்பில் 105 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 400 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில இந்த வழக்சின் விசாரணை நடைபெற்றது. சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் தமது தரப்பு வாதத்தை கோர்ட்டில் முன் வைத்தார். அதேபோல குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் இருந்தும் வாதங்கள் மூன வைக்கப்பட்டன.அனைத்துத் தரப்பு விசாரணைகள், வாதங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் இன்று (மார்ச் 23) தீர்ப்பு அளித்தார்.
நீதிபதி தனது தீர்ப்பில் தந்தை, மகன் இருவரின் மரணமும் என்பது கொலை என தீ்மானிக்கப்படுகிறது எனக்கூறி, போலீசார் 9 பேரும் குற்றவாளிகள் எனக்கூறியுள்ளார். அவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
