மதுரை: 'தமிழக சட்டசபை தேர்தலில் தமிழகம் ,என்.டி.ஏ., கூட்டணி இடையே தான் போட்டி. அதில் தமிழகம் வெல்லும்,' என

மதுரை: ‘தமிழக சட்டசபை தேர்தலில் தமிழகம் ,என்.டி.ஏ., கூட்டணி இடையே தான் போட்டி. அதில் தமிழகம் வெல்லும்,’ என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ம.நீ.ம., தலைவர் கமல் பண்பாட்டு மையம் சார்பில் மகாத்மா காந்தி பற்றிய ‘மறவோம் பாபுஜி மற்றும் சகோதரர்களை நினைவு கூர்வோம்’ தலைப்பில் மதுரை காந்தி மியூசியத்தில் விழா நடந்தது.

அதில் முதல்வர் பேசியதாவது: கமல், ‘மறதி ஒரு தேசிய வியாதி,’ என சினிமாவில் வசனம் பேசியிருப்பார். அதுபோல் காந்தியை மக்கள் மறந்துவிடக்கூடாது என்றுதான் அவரது வாழ்க்கையில், பெரிய திருப்புமுனையை, மன மாற்றத்தை ஏற்படுத்திய மதுரை மண்ணில், இந்நிழ்ச்சியை கமல் ஏற்பாடு செய்தார். காந்தியை அரையாடைக்கு மாற்றிய மண்தான் மதுரை மண். காந்தியின் அடியொற்றி அரசியலுக்கு வந்தவர் ஈ.வெ.ரா., பின் காந்தியின் பல விஷயங்களில் முரண்படவும் செய்தார். காந்தி ஒரு பயங்கரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டபோது, ‘இந்தியாவிற்கு காந்தி தேசம்,’ என பெயர் சூட்ட வேண்டும் என ஈ.வெ.ரா கூறினார்.

கமல், ‘நாமும் காந்தியை பிறரில் தேடாமல், காந்தியாக மாறுவோம்,’ என்பார். இதை ‘மறவோம்’ என்பதற்காகவே இந்நிகழ்ச்சி. அனைத்து மாற்றங்களும் தன்னில் இருந்து உருவாக வேண்டும் என்று சொன்னவர் காந்தி. காந்தியை மக்கள் மனதிலிருந்து எப்படியாவது அகற்றிட வேண்டும் என மத்திய பா.ஜ., அரசு திட்டமிட்டு துடித்துக் கொண்டிருக்கிறது. காந்திய கொள்கைகளை அழிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து இப்போது, காந்தி என்கிற பெயரே இருக்கக் கூடாது என்ற இடத்திற்கு அவர்கள் நகர்ந்திருக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டுதான், 100 நாள் வேலைத் திட்டத்திலிருந்து, காந்தியின் பெயரை நீக்கியது. அடுத்து, கரன்சி நோட்டிலிருந்தும் காந்தி படத்தை எடுத்தாலும் எடுத்து விடுவார்கள்.

காந்தி ஒற்றைத்துவத்திற்கு எதிரானவர். ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளம் அவர். மதநல்லிணக்கத்திற்கான மகத்தான மந்திரம். இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கருத்தியல்தான் காந்தி. பா.ஜ.,வை சேர்ந்த ஒரு முதல்வரே முஸ்லிம் களுக்கு எதிராக வன்முறையை துாண்டுவதை பார்த்திருப்பீர்கள்.

கிறிஸ்துமஸ் அன்றைக்கு கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். மாற்றுத்திறனாளி என்றுகூட பார்க்காமல், சிறுமி மீது தாக்குதல் நடத்துகின்றனர். தமிழகத்தில் இப்படிப்பட்ட சம்பவங்களை அரங்கேற்ற வேண்டும் என்று வெறி பிடித்து அலைகிறார்கள். நமது அரசும், தோழமை கட்சிகளும் இருக்கும் வரை, அதை நாங்கள் நடக்க விடவே மாட்டோம். மதம் பிடிக்காமல் மக்களை பக்குவப்படுத்துவதுதான் மதங்களின் வேலை. மதவெறி புகுந்தால், முதலில் இறப்பது மனிதம்தான். இதை நன்றாக உணர்ந்த காரணத்தினால்தால் வெறுப்பை புறந்தள்ளி, தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.

மனிதம், மனிதர்களை அழித்து ஆட்சியை பிடிக்க நினைகும் பா.ஜ.,வின் பிடியில் தமிழகம் சிக்கக்கூடாது. இந்த தேர்தல் தமிழகம் , என்.டி.ஏ.,கூட்டணி இடையேதான். அதில் தமிழகம் வெல்லும். கமல் பேசுவது ‘எங்களுக்கு புரியவில்லை’ என சிலர் கூறுவர். அவர்களுக்கு புரியாமல் இல்லை. ஆனால், புரிந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறார்கள். மீடியா, மைக் முன்னால் புலம்பிக் கொண்டிருந்தவர்களை, இப்போது பார்லிமென்ட் ‘மைக்’கிலும் கமல் புலம்ப வைத்துவிட்டார். என்னுடைய பாராட்டுக்கள். இவ்வாறு பேசினார்.

Source link