மதுரை மத்தியா?, சென்னை மயிலாப்பூரா?: தியாகராஜனுக்கு 'ஆப்ஷன்' தரும் தி.மு.க.,

மதுரை: மதுரையில் மீண்டும் மத்திய தொகுதியில் போட்டியிட தயாராகும் அமைச்சர் தியாகராஜனுக்கு, கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்புவதால், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் அவரை போட்டியிட வைக்க தி.மு.க., தலைமை யோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க.,வில் சக்தி வாய்ந்த அமைச்சராக வலம் வந்தவர் தியாகராஜன். அவரது சர்ச்சைக்குரிய ஆடியோ பேச்சு வெளியானது முதல் அவருக்கான முக்கியத்துவம் சற்றே குறைந்தது. ஆனால் முதல்வரின் மருமகன் சபரீசனின்ஆதரவால் அவர் தற்போதும் தவிர்க்க முடியாத நபராகவே கட்சியில் உள்ளார். இதனால்தான் சட்டசபை தொகுதிகள் குறித்த ஆய்வு நிகழ்ச்சிக்கு மதுரை வந்த சபரீசன், வரும் தேர்தலில் அமைச்சர் தியாகராஜன் வெற்றி குறித்து அதிக அக்கறையுடன் நிர்வாகிகளிடம் பேசினார்.

அப்போது, ‘மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் மேயர் உட்பட அமைச்சரின் ஆதரவாளர் பலர் பதவியை இழந்தனர். முன்னாள் உதவியாளர்கள் மோசடி செய்த விவகாரம் பூதாகரமாகியது. அமைச்சர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் தளபதி ஆகியோரிடையே அவருக்கு உள்ள முரண்பாடு, அழகிரி ஆதரவாளர்களின் எதிர்ப்பு போன்ற பிரச்னைகள் தேர்தலில் தியாகராஜனுக்கு எதிராக திரும்பும்.

கட்சி நிர்வாகிகளையும் அவர் உரிய முறையில் அரவணைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால் மத்திய தொகுதியில் அமைச்சர் தியாகராஜன் மீண்டும் போட்டியிட்டு, அவரை எதிர்த்து அ.தி.மு.க., கூட்டணியில் வலுவான வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெறுவது சவாலாக இருக்கும்’ என சபரீசனிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் தனது பாணியில் தொகுதியை சரிசெய்த அமைச்சர் தியாகராஜன், தற்போது தீவிரமாக பிரசாரத்தையும் துவக்கி விட்டார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே மக்களுக்கு பிளாஸ்டிக் சேர்களை வழங்கினார். அவரது ஆதரவாளர்கள் சிலர் தியாகராஜன் களமிறங்குவதாக போஸ்டர் ஒட்டினர். இதற்கிடையே அவரை சென்னை மயிலாப்பூரில் களம் இறக்கலாமா என்ற யோசனை கட்சிக்குள் எழுந்துள்ளது.

தி.மு.க.,வினர் கூறியதாவது: கட்சியில் விருப்ப மனுக்கள் தாக்கலில் பெரும்பாலான அமைச்சர்களின் தொகுதியில் போட்டியிட நிர்வாகிகள் ஒருவரும் மனு அளிக்கவில்லை. ஆனால் தியாகராஜன் தொகுதியில் போட்டிப் போட்டுக் கொண்டு மனு அளித்தனர். அவரது தொகுதியில் எதிர்க் கட்சியில் வலுவான வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெறுவது சவாலாகும்.

அமைச்சர் பெரும்பாலும் சென்னையில்தான் உள்ளார். அவரது குடும்ப பின்னணி மாநிலம் முழுவதும் தெரிந்ததே.அவரது வெற்றியை உறுதி செய்ய சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிட வைக்கலாமா என்ற ஆலோசனை நடக்கிறது. அது மயிலாப்பூராக இருக்கும் என்கின்றனர். ஆனால் தியாகராஜன் ‘சாய்ஸ்’ மீண்டும் மதுரை மத்தி தொகுதியாக தான் உள்ளது என்றனர்.

Source link