மதுரை: ”ஸ்டாலினின் விருப்பத்திற்கேற்ப தமிழக தேர்தல் முடிவுகள் இருக்காது” என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1ல் மதுரை வருகிறார். அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் ரிங்ரோடு மண்டேலாநகர் பகுதியில் நடக்க உள்ளது.
இதற்கான இடத்தை ஆய்வு செய்ய வந்த பொன்.ராதாகிருஷ்ணனன் கூறியதாவது: சென்ற மாதம் மதுராந்தகத்தில் பிரதமர் பங்கேற்ற பொதுக் கூட்டம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க., ஆட்சியை அகற்றியே தீருவோம் என்ற எதிர்பார்ப்புடன் தமிழக மக்கள் உள்ளனர். மதுரை கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பர்.
வலுப்பெறும்
தே.ஜ., கூட்டணி பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை தமிழக மக்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல இருக்கும். தி.மு.க., கூட்டணியில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று கேட்பது அவர்களின் பிரச்னை. முன்னாள் முதல்வர் கருணாநிதி, ”கூடா நட்பு கேடாய் முடியும்” என்று கூறியிருந்தார்.
அவரது வாக்கு இவ்விஷயத்தில் பொய்த்ததே இல்லை. எப்போதெல்லாம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழர்கள் தலைகுனியும் நிகழ்வுகள் நடக்கின்றன.
பா.ம.க.,வின் உட்பூசல் பிரச்னைக்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. அன்புமணி தே.ஜ., கூட்டணி வெற்றிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். அதை மட்டுமே பார்ப்போம். அ.தி.மு.க.,விடம் அதிகாரத்தில் பங்கு கேட்போமா என்பது குறித்து இப்போதே போட்டு உடைக்க வேண்டிய அவசியமில்லை.
கூட்டணி கட்சிக்கு பங்கு கிடையாது என்று முதல்வர் ஸ்டாலின் சொல்வதால் அவர் அதற்கு விருப்பப்படலாம். ஆனால் மக்கள் விருப்பப்படவில்லை. முதல்வரின் விருப்பத்திற்கேற்ப தேர்தல் முடிவுகள் இருக்காது. அவர்கள் தனித்தும் வர இயலாது. கூட்டணி அத்தனை பேரும் சேர்ந்து முயன்றாலும் வரமுடியாது. தே.ஜ., கூட்டணி டப்பா இன்ஜின், தி.மு.க., கூட்டணிதான் டாப் இன்ஜின் என முதல்வர் கூறியுள்ளார். எந்த இன்ஜின் எப்படி உள்ளது என்று இன்னும் இருமாதத்தில் தெரிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
