மத்திய அரசு விதிகளின்படிதான் வரி உயர்வு
கி.நடராஜன், தொ.மு.ச., தலைவர்
அ. தி.மு.க., ஆட்சியின் போது, போக்குவரத்து ஊழியர்களுக்கு மாத சம்பளம்
கொடுப்பதிலேயே சிக்கல் இருந்தது. இந்த நிலை தற்போது முற்றிலும்
மாறிவிட்டது. அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தேவையான நிதியை தாமதமின்றி
வழங்கியதால், அவை, முன்பை விட சிறப்பாக செயல்படுகின்றன.
அரசு
பஸ்சில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து
வருகிறது. இந்த ஒரு திட்டத்தால் மட்டுமே, பெண்கள் மாதந்தோறும் 900 ரூபாய்
வரை சேமிப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கான மானியத்தை அரசு
வழங்குவதால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நிதி ஆதாரத்தை ஏற்படுத்திக்
கொள்ள முடிகிறது. இந்த திட்டம், தற்போது தெலுங்கானா உட்பட பல்வேறு
மாநிலங்களில் துவக்கப்பட்டுள்ளது.
‘உதய்’ மின் திட்டத்தில் மாநில
அரசு கையெழுத்திட்டதால், ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க
வேண்டும் என மத்திய அரசு சொல்கிறது. அதன்படி, வணிக மற்றும்
தொழில்பிரிவுக்கு மட்டுமே, சிறிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில், ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்தினால்
மட்டுமே, மத்திய அரசின் மேம்பாட்டு நிதியை பெற முடியும். எனவே, சிறிதளவு
சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதுவும் பா.ஜ., ஆளும் மாநிலங்களை விட
தமிழகத்தில் குறைவு.
தனியாரிடம் தாரைவார்த்து விட்டு நாடகம்
எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க., முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர்
தி. மு.க., ஆட்சியில், தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கான பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதை, அவர்களின் கூட்டணி கட்சிகளின் தொழிற்சங்கங்களே வெளிப்படையாக தெரிவித்துள்ளன. தேவையான உதிரி பாகங்கள் இல்லாததால், பஸ்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால், விபத்துகள் அதிகமாகின்றன. உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
சென்னையில், தற்போது தனியார் பங்களிப்போடு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த திட்டத்தை, தமிழகத்தின் மற்ற நகரங்களில் விரிவுபடுத்தவும் தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது. ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்பப் பிரிவில் நிரந்தரப் பணிகள் போன்றவை, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.
இதனால், படித்து விட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நிரந்தர வேலை பறிக்கப்பட்டு விட்டது. அரசு பஸ்களில் இலவச பயணம் திட்டத்தை அமல்படுத்தி, மற்றொருபுறம் மின் கட்டணம் உட்பட இதர வரிகளை தி.மு.க., அரசு உயர்த்தி, மக்களை ஏமாற்றுகிறது.
ஒருபுறம் இலவசம் எனக்கூறி, அத்தொகையை மற்றொரு புறம் வரியை உயர்த்தி வசூலிக்கிறது. வீட்டு வரி, மின் கட்டண உயர்வால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.
