மனிதன் தெய்வமாகலாம்- விமர்சனம்(2 / 5)
சாலை வசதி இல்லாத ஒரு மலை கிராமத்தில் வாழும் செல்வராகவன், நுங்கு வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்துகிறார். நாயகி குஷி ரவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், மனைவியை நல்லபடியாக வாழ வைக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி நெடுஞ்சாலை அருகே சிறிய உணவகம் ஒன்றை தொடங்குகிறார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது, திடீரென குஷி ரவி தற்கொலை செய்து கொள்கிறார்.
மனைவியின் மரணத்துக்குப் பின்னால் இருக்கும் உண்மையை அறியும் செல்வராகவன், அதன் பிறகு எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் அந்த கிராம மக்களுக்கு தெய்வமாக மாறுகிறார்.
இறுதியில் செல்வராகவன் என்ன செய்தார்? மாற்றம் எப்படி நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் செல்வராகவன் மிகவும் சாதுவான மனிதராக தனது கதாபாத்திரத்தை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். மனைவி மீதான அன்பு, இழப்பின் வலி, அதன் பிறகு வரும் கோபம் ஆகியவற்றை இயல்பாக காட்டியுள்ளார். ஆனால் சில இடங்களில் அவரது நடிப்பில் செயற்கைத்தனம் தெரிகிறது. குறிப்பாக உரையாடல் காட்சிகளில் இன்னும் நன்றாக இருக்கலாம் என்ற உணர்வு வருகிறது.
நாயகியாக நடித்த குஷி ரவி, குறைந்த காட்சிகளிலேயே தனது இருப்பை உணர்த்துகிறார். காதல் மற்றும் உணர்ச்சி காட்சிகளில் இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார். கெளசல்யா, ஆர்.எஸ்.சதீஷ் ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரங்களை சரியாக செய்து முடித்துள்ளனர்.
மைம் கோபி, வில்லனாக வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் நடித்துள்ளார். மற்ற புதுமுகங்களின் இயல்பான நடிப்பு கிராம வாழ்க்கையை நம்பத்தகுந்ததாக காட்டுகிறது.
இயக்கம்
இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத், அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழும் கிராம மக்களின் பிரச்சனைகள் மற்றும் கந்துவட்டி கொடுமைகளை உணர்ச்சிகரமாக பதிவு செய்துள்ளார்.
திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், கதாபாத்திரங்களின் வலி மற்றும் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறது. ஒரு சாதாரண மனிதன் எப்படி மாற்றம் அடைந்து மற்றவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார் என்பதையும் நிதானமாக காட்டியுள்ளார்.
ஒளிப்பதிவு
ரவி வர்மாவின் ஒளிப்பதிவு கிராம வாழ்க்கையின் நிஜ நிலையை நம் கண்முன் நிறுத்துகிறது.
இசை
ஏ.கே.பிரியனின் இசை மற்றும் பின்னணி இசை காட்சிகளின் உணர்வை உயர்த்துகிறது.
