மனோ தங்கராஜுக்கு எதிராக புகார்; ஸ்டாலின் முன்னிலையில் கொந்தளிப்பு; நேர்காணலில் நடந்தது என்ன? | Complaint against Mano Thangaraj; Uproar in Stalin’s presence; What happened in the interview?

சட்டசபை தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான நேர்காணலில் அமைச்சர் மனோதங்கராஜிக்கு சீட் கொடுக்கக் கூடாது என தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியதாக நேர்காணல் முடிந்து வெளியே வந்த திருவட்டாறு ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் கலை வெளிப்படையாகவே மீடியாக்களிடம் பேசினார்.

நேர்காணலில் நடந்தது குறித்து அதில் கலந்துகொண்ட நிர்வாகிகள் நம்மிடம் கூறுகையில், “பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட சுமார் 38 பேர் விருப்பமனு வழங்கியிருந்த நிலையில் நேர்காணலில் சிட்டிங் எம்.எல்.ஏ மனோதங்கராஜ், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், திருவட்டாறு வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான்பிரைட், திருவட்டாறு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜான்சன் உள்ப்பட 28 பேர் கலந்துகொண்டனர்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தியபோது டி.ஆர்.பாலு, துரைமுருகன், நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நேர்காணலில், “வந்த அனைவருக்கும் சீட் கொடுக்க வாய்ப்பு இல்லை. உங்களில் ஒருவருக்கு சீட் கொடுத்தால் நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு கட்சிப் பணி செய்து, உழைத்து வெற்றிபெற வைப்பீர்களா?’ என முதல்வர் ஸ்டாலின் கேட்டார்.

அனைவரும் சரி எனச் சொன்னார்கள். உங்களுக்கு எதாவது ஆட்சேபனை இருந்தால் கூறுங்கள் என ஸ்டாலின் கேட்டார். முதலில் பேசிய ஜான்பிரைட், ‘மனோதங்கராஜுக்கு இரண்டு முறை வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். அவர் அமைச்சரும் ஆகிவிட்டார். அவரை யாரும் தொடர்புகொள்ள முடியாத நிலைதான் இருந்தது.

கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் அவரால் பயன் இல்லை. அவர் கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால் பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட புதியவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அப்படி கொடுத்தால் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றிபெறும்’ எனச் சொன்னார். உடனே அங்கிருந்த நிர்வாகிகள் கைத்தட்டினர்.

அடுத்து பேசிய ஜான்சன், ‘அமைச்சர் மனோதங்கராஜுக்கு சீட் கொடுக்க வேண்டும்’ என்றார். பின்னர் பேசிய ஸ்டாலின், ‘தொகுதியில் வளர்ச்சிப் பற்றி பேசலாம். யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதுபற்றி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்றார்.

ஸ்டாலின் தலைமையில் நடந்த நேர்காணல்

ஸ்டாலின் தலைமையில் நடந்த நேர்காணல்

கிள்ளியூர் தொகுதிக்கான நேர்காணலின்போது, அந்தத் தொகுதியை தி.மு.க-வுக்கு ஒதுக்கவேண்டும் என நிர்வாகிகள் கேட்டனர். கொல்லங்கோடு நகராட்சி மற்றும் 18 பஞ்சாயத்துக்களில் 13-ல் தி.மு.க வென்றுள்ளது எனக் கூறியுள்ளனர்.

Source link