மஹா.வில் முஸ்லிம்களுக்கான 5% இடஒதுக்கீடு ரத்து; முதல்வர் பட்னவிஸ் அறிவிப்பு

மும்பை: மஹாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கான 5 சதவீதம் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் வெளியிட்டு உள்ளார்.

மஹாராஷ்டிராவில் காங்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அவசர சட்டம் மூலமாக மராத்தியர்களுக்கு 16 சதவீதம், முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்கள் முன்னேறுவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2014 சட்டசபை தேர்தலுக்கு பின், பாஜ, சிவசேனா கூட்டணி ஆட்சியில் இந்த அவசர சட்டம் சட்டசபையில் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை. ஆகையால் இந்த சட்டம் காலாவதியானது. மேலும் 50 சதவீதம் இடஒதுக்கீடு என்ற சுப்ரீம்கோர்ட் வரம்பை மீறுவதாக 5 சதவீதம் இட ஒதுக்கீடு இருப்பதாக மும்பை ஐகோர்ட் தடை விதித்து இருந்தது.

இந் நிலையில் முஸ்லிம்களுக்கான 5 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மஹாராஷ்டிரா அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதில், சமூகம், கல்வி ஆகியவற்றில் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு அரசு வேலைகள், கல்வி நிலையங்களில் அளிக்கப்பட்டு வந்த 5 சதவீதம் இடஒதுக்கீடு செல்லாது, ரத்து செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Source link