மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிக்கிறதா? அதிர்ச்சியை ஏற்படுத்திய 10-ம் வகுப்பு மாணவரின் மரணம்!

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் படிப்பு, தேர்வு, மதிப்பெண், எதிர்காலம் போன்ற பல்வேறு காரணங்களால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். வெளியில் இயல்பாக இருப்பது போல் தோன்றினாலும், பல மாணவர்கள் உள்ளுக்குள் கவலை, பயம் மற்றும் தனிமையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, பெற்றோர் குழந்தைகளிடம் மதிப்பெண்களை மட்டும் கேட்பதை விட, அவர்களின் மனநிலையையும் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். எந்த பிரச்சினை வந்தாலும் தயக்கமின்றி பகிர்ந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்கு பெற்றோர் ஏற்படுத்துவது மிகவும் அவசியம். அன்பான உரையாடலும், ஆதரவான குடும்ப சூழலும் பல சோகமான முடிவுகளைத் தடுக்க உதவும்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் படித்து வந்த சங்கர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை ஒரே நேரத்தில் உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே மயங்கிக் கிடந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் சங்கர் இறந்து கிடப்பதைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சங்கருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி காவல் துறையினர் மருத்துவமனைக்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மாணவர் இந்த முடிவை எடுக்கக் காரணம் என்ன என்பது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி தொடர்பான மன அழுத்தமா, குடும்ப சூழலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “உனக்கு என்னைவிட கள்ளக்காதலிதான் முக்கியமா?” ஆத்திரத்தில் 7 மாத குழந்தையின் தாய் செய்த காரியம்…

Source link