திருச்சி: திருச்சி மாவட்டம் ஆலம்பட்டிபுதுாரில், நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாடு கடந்த 21ம் தேதி நடந்தது.
இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். மாநாட்டு திடலில், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படம் உட்பட பல இயக்கங்களைச் சேர்ந்தோர் படங்கள் இடம்பெற்று இருந்தன.
இதுகுறித்த புகாரின் பேரில் இனாம்குளத்துார் போலீசார், மாநாட்டை ஏற்பாடு செய்த அக்கட்சியின் திருவெறும்பூர் வேட்பாளரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான ஜல்லிக்கட்டு ராஜேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது தொடர்பாக, அக்கட்சியின் ஸ்ரீரங்கம் வேட்பாளர் தர்மராஜ் மீது இனாம்குளத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுபோல, மணப்பாறையில், ஊராளிக்கவுண்டர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 8ம் தேதி மாநில மாநாடு நடந்தது.
இதில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் மாநாடு நடத்தியது, இருசக்கர வாகனங்களில் வந்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது என மூன்று வழக்குகள், அந்த அமைப்பின் தலைவர் நாகராஜ், பொதுச்செயலர் தியாகராஜன் உட்பட 500 பேர் மீது பதியப்பட்டுள்ளன.
