மானாமதுரை: மானாமதுரையில் பலியான விசாரணை கைதி ஆகாஷ் டெலிசன் உயிரிழந்த விவகாரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் கடந்த 6ம் தேதி இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மானாமதுரை போலீஸாரால் கைது செய்யப்பட்ட போது தப்பி ஓட முயன்றதில் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 8ம் தேதி இரவு இறந்தார். அவரது குடும்பத்தினர், உறவினர்கள், சமுதாய அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசார் அடித்ததால் தான் அவர் இறந்ததாக கூறி 5 நாட்களாக மதுரை, ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் மானாமதுரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சி.பி.சி.ஐ.டி., போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனில் விசாரணையை துவக்கிய அதிகாரிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.
எஸ்.பி., ஷாஜிதா, டி.எஸ்.பி., அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர்கள் சரவணகுமார், கீதா, எஸ்.ஐ., சிவக்குமார் உள்ளிட்ட போலீசார் இன்று ஆகாஷ் டெலிசனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய பிறகு இதே வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கும் சென்று விசாரணை நடத்தினர்.
சஸ்பெண்ட்
இதற்கிடையே, விசாரணை கைதி ஆகாஷ் டெலிசன் உயிரிழந்த விவகாரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆகாஷிடம் விசாரணை நடத்திய திருப்புவனம் இன்ஸ்பெக்டர் தீலிபன், மானாமதுரை எஸ்.ஐ., குகன், சிவகங்கை நகர் ஸ்டேஷன் தலைமை காவலர் தெய்வேந்திரன், சிப்காட் ஸ்டேஷன் தலைமை காவலர் சரத்குமார், மானாமதுரை ஸ்டேஷன் கிரேடு 1 போலீசார் காளீஸ்வரன், திருப்புவனம் ஸ்டேஷன் கிரேடு 1 போலீஸ் மனோகரன் ஆகிய 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
