மானுட வாழ்வின் அறநெறி வகுத்து, குறள்வரி தந்த வான்புகழ் வள்ளுவன், நடுநிலை போற்றுகையில், ‘சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி’ என்கிறார். சீர்தூக்கும் துலாக்கோல் போல், நடுநிலை நின்று, ஒருபக்கமாக சாயாதிருப்பதே சான்றோருக்கு அழகென்று உரைக்கிறார்.
அவ்வாறான நடுநிலை கொள்கையினை தோளில் ஏற்றி, 75 ஆண்டுகளாக வெற்றி நடைபோடும் ‘தினமலர்’ நாளிதழுக்கும் எனக்குமான பந்தம், பல்லாண்டு கால சொந்தம்.
கர்நாடக மாநிலம், கோலாரை பூர்வீகமாகக் கொண்ட நான், குடியேறியது சென்னையில்.
ஆரம்ப காலத்தில், தமிழ்வாசிப்பு எனக்கு வராவிட்டாலும், குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன், அன்றாடம் தினமலர் செய்திகளை அறிந்து பூரித்துப்போவேன். குடும்ப உறுப்பினர்களும் இதன் வாசகர்கள் தான். சிறார் வாசிப்பை சீர்துாக்கும் – சிறுவர் மலர், இறைமறை போற்றும் – ஆன்மிக மலர், வாரம் ஒருமுறை பூக்கும் – வாரமலர், திரைமறைவு நிகழ்வை வெளியுலகறிய வெளுத்துக்கட்டும் – டீக்கடை பெஞ்சு, அறிவை கூர்தீட்டும் – சிந்தனைக்களம் என, எண்ணற்ற இணைப்புகளும், பகுதிகளும் என்னை, தினமலர் உடன் பிணைத்துப் போட்டுள்ளன என்றால் மிகையல்ல. அவ்வகையில் பவளவிழா நாளிதழை வாழ்த்தி பெருமை கொள்கிறேன்.
வர்த்தக உலகத்தில், தமக்கென தனியிடத்தை தக்கவைத்து, ஒரு நிறுவனம் நிலை பெறுவதை, ‘பொஸிஷனிங்’ என்போம். அப்படியானதொரு இடத்தை, ஆரம்ப காலம் முதலே தமக்கென உருவாக்கி தக்க வைத்துக் கொண்டதில், தனி முத்திரை பதித்தது தினமலர். ‘ஒரு செய்தியை முழுமையாக, ஆழமாக, தெளிவாக சொல்ல வேண்டும்; அது பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் இருக்க வேண்டும்’ என்ற தவிப்பும், தாகமும் தினமலர் நாளிதழின் எழுத்து நடையில் எப்போதும் உண்டு. அதனால் தான், ஆண்டாண்டு காலமாக என்னைப் போன்ற எத்தனையோ வாசகர்களை தன்னுடன் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.
ஆழ்கடல் மீனவன் பல மைல் பயணித்து, விலைமதிப்புள்ள மீன்களை அள்ளிவந்து, அனைவருக்கும் விருந்தளிப்பதைப் போன்று, பல இடங்களிலும் பார்த்து, கேட்டு, படித்து வந்து, உணர்வு, உணவு, உறவு, அறிவு என ருசிகர தகவல்களை வாரமலரில் ரசனையுடன் பரிமாறும் அந்துமணியின் அனுபவக்கதைகள், அறிவை விருட்சமாக்கும் விதைகள்!
வாசிக்க செய்திகள் தருவது மட்டுமின்றி, லட்சோப லட்சம் மாணவர்களுக்கு கலங்கரை விளக்காக இருந்து வழிகாட்டும், ஜெயித்துக்காட்டுவோம், வழிகாட்டி நிகழ்ச்ச்சிகளை நடத்துவதும் தினமலர் தான். ஆண்டுதோறும் சிறுவர் முதல் பெரியவர் வரை, குறிப்பாக இல்லத்தரசிகளின் கொண்டாட்டத்துக்காக நடத்தப்படும், ‘ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்’ எனும் வீட்டு உபயோகப்பொருட்கள் கண்காட்சி, வர்த்தகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்ற மாபெரும் நுகர்வோர் திருவிழா.
வர்த்தக நிறுவனங்களுக்கும், தினமலருக்குமான உறவு, ‘செம்புலப்பெயல் நீர்’ போன்றது. வானத்திலிருந்து செம்மண்ணில் வீழ்ந்த மழைநீர், எவ்வாறு இரண்டற கலந்து ஒன்றாகிறதோ, அதே போன்ற உறவுதான், வர்த்தகர்களான எங்களுக்கும், தினமலருக்குமான உறவு.
இன்னும் பல நுாற்றாண்டுகளை, பல தலைமுறைகளை கடந்தும் தினமலர் பயணிக்க, வாசகன் என்ற முறையிலும், விளம்பரதாரர் என்ற முறையிலும் மனமகிழ்ந்து வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன்.
பி.ஏ., கோதண்டராம ஷெட்டி
தலைவர் & நிர்வாக இயக்குனர், விவேக்ஸ்
