அ.தி.மு.க-வில் ஒற்றைத்தலைமை பஞ்சாயத்து வெடிக்கும்வரை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், பா.வளர்மதி, தமிழ்மகன் உசேன், ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால், கே.பி.முனுசாமி என எட்டு பேர் ஆட்சி மன்றக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். 2022-ல் ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு, மற்ற ஆறு பேரும் குழுவின் உறுப்பினர்களாகத் தொடர்ந்தனர். தற்போது, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், இன்பதுரை ஆகிய மூவரையும் ஆட்சிமன்றக் குழுவில் புதிதாக இணைத்திருக்கிறார் எடப்பாடி.
இதன்மூலமாக, குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்திருக்கிறது. விஷயம் அதுவல்ல… அந்த அறிவிப்பு இரட்டை ‘மணி’களில் மற்றொரு மணியான முன்னாள் அமைச்சருக்கு கடுமையான வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறதாம். ஏற்கெனவே தலைமைக் கழகப் பொறுப்பிலும் இல்லை, தற்போது ஆட்சிமன்றக் குழுவிலும் பெயர் சேர்க்கப்படாததால் கடுமையான அப்செட்டில் இருக்கிறாராம். ‘2017 தொடங்கி தற்போது வரை டெல்லி தொடர்பான பல்வேறு விஷயங்களில் கூடவே இருந்தவன் நான். என்னைத் தொடர்ந்து புறக்கணிப்பது சரியல்ல’ என தன் ஆதரவாளர்களிடம் வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறார்.
