'மாற்று எரிபொருளுக்கு மாற பெட்ரோலிய நிறுவனங்கள் அனுமதிக்காது': நிதின் கட்கரி

புனே: “நம் நாட்டில் மாற்று எரிபொருட்களுக்கு மாறுவதை பெட்ரோலிய நிறுவனங்கள் எளிதில் அனுமதிக்காது,” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் புனேவில் நேற்று நடந்த உயிரி எரிபொருள் மாநாட்டில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சருமான நிதின் கட்கரி பேசியதாவது:

எரிசக்தியில் தன்னிறைவு பெற்றால், நம் நாட்டின் பொருளாதாரம், 460 லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை அடையும்.

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி, எரிசக்தி பாதுகாப்பு நாட்டிற்கு எவ்வளவு அவசியம் என்பதை காட்டுகிறது.

நாட்டில் பயன்படுத்தும் எரிசக்தியில், 86 சதவீதத்தை இறக்குமதி செய்கிறோம். இதற்காக, 22 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

எனவே, 2030க்குள் நம் போக்குவரத்து அமைப்பை பாதுகாப்பானதாக மாற்றுவதே நோக்கம். மாசற்ற எரிபொருட்களையும் விவசாயத்தையும் ஊக்குவித்தால், உள்நாட்டு எரிபொருட்கள் மூலம் பல நன்மைகளை பெறலாம்.

இது தவிர, கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

மாற்று எரிபொருட்கள் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நலனுக்காகவும், நுகர்வோருக்கு செலவை குறைக்கவும் வழிவகுக்கும்.

ஆனால், 22 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதில் பெருநிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இதனால், மாற்று எரிபொருளை பயன்படுத்துவதை அந்நிறுவனங்கள் அனுமதிக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link