மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு 2026, மார்ச் மாதத்தில் 10 சதவீதம் குறைந்து, 73.48 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது மியூச்சுவல் பண்டுகளின் சங்கமான ‘ஆம்பி’ வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் நிகழும் போர் பதற்றங்கள் மற்றும் வரி கொள்கைகள் காரணமாக, பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. இந்த சூழலில், கடன் சார்ந்த பண்டுகளில் அதிகளவு முதலீடுகள் வெளியேறியிருக்கிறது.
வழக்கமாக, நிதியாண்டு இறுதியில், நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், தங்களின் வரி தேவைகளுக்காகவும், முன்பணம் செலுத்துவதற்காகவும், குறுகியகால கடன் பத்திரங்கள் சார்ந்த திட்டங்களில் இருந்து பணத்தை திரும்ப பெறுவது வழக்கம். அந்தவகையில், கடந்த மார்ச் மாதத்தில் ‘லிக்விட், ஓவர்நைட், மனி மார்கெட்’ பண்டுகளில் இருந்து அதிகளவு முதலீடுகள் வெளியேறியுள்ளது.
அதேநேரம், எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்தது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. நடப்பாண்டின் துவக்கத்தில் இருந்தே எஸ்.ஐ.பி., முதலீடுகள் சீராக உள்ளதையும் ஆம்பியின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
