மிலான் குளிர்கால ஒலிம்பிக்: 3 நாள்களில் 10,000 ஆணுறைகள் காலி; ஒலிம்பிக் கமிட்டி சொன்ன பதில் என்ன?

இத்தாலியின் மிலான் ஒலிம்பிக் போட்டியில் ஆணுறைத் தட்டுப்பாடு பேசுபொருளாகியிருக்கிறது.

இத்தாலியின் மிலான் ஒலிம்பிக் போட்டி

இத்தாலியின் மிலான்-கோர்டினா (Milan-Cortina) பகுதியில் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்காகப் பிரமாண்ட உடற்பயிற்சிக் கூடம், டேபிள் ஃபுட்பால், ஏர் ஹாக்கி, பியானோ மற்றும் இலவச குளிர்பான இயந்திரங்கள் எனப் பல வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில், விளையாட்டு வீரர்களுக்கு ஆணுறைகளும் வழங்கப்படும்.

எனவே, விளையாட்டு வீரர்களுக்காக 10,000 இலவச ஆணுறைகள் வழங்கப்பட்டிருந்தன. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி சில நாள்களே ஆன நிலையில், வீரர்களுக்காக வழங்கப்பட்டிருந்த 10,000 இலவச ஆணுறைகள் மூன்றே நாள்களில் தீர்ந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆணுறை (Representational Image)
ஆணுறை (Representational Image)
Photo by Reproductive Health Supplies Coalition on Unsplash

இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் செய்தியாளர்களிடம் நகைச்சுவையாகப் பேசினார்.

அப்போது, “ஒலிம்பிக் கிராமத்தில் காதலர் வாரக் கொண்டாட்டம் உச்சத்தில் உள்ளது என்பதை இது காட்டுகிறது. 2,800 வீரர்கள் உள்ளனர். 10,000 ஆணுறைகள் தீர்ந்துவிட்டன. கணக்கைப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். ஒலிம்பிக் சாசனத்தின் விதி 62-ன் படி, கண்டிப்பாக ஆணுறை வழங்கப்பட வேண்டும்.

எதிர்பார்த்ததை விடத் தேவை அதிகமாக இருந்ததால், கூடுதல் விநியோகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். திங்கள்கிழமைக்குள் அனைத்து கிராமங்களுக்கும் விநியோகிக்கப்படும். ஒலிம்பிக் முடியும் வரை தட்டுப்பாடு வராமல் தொடர்ந்து இருப்பு வைக்கப்படும்” என்றார்.

ஆணுறைகள் தீர்ந்தன குறித்து மெக்சிகோவைச் சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் டோனோவன் கரில்லோ, “எல்லோரும் அதிர்ச்சியடைந்தது போல நானும் அதிர்ச்சியடைந்தேன்” என்றார்.

ஒலிம்பிக் கமிட்டி (IOC) செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ்
ஒலிம்பிக் கமிட்டி (IOC) செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ்

கடந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் சுமார் 3 லட்சம் ஆணுறைகள் (ஒரு வீரருக்கு ஒரு நாளைக்கு இரண்டு என்ற கணக்கில்) வழங்கப்பட்டன. ஆனால், இந்த முறை 3,000-க்கும் குறைவான வீரர்களே பங்கேற்பதால், 10,000 உறைகளே போதுமானதாக இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் கணித்திருந்தனர். ஆனால், அவர்களின் கணிப்பை மீறி இவை தீர்ந்துபோனது அதிகாரிகளைத் திக்குமுக்காட வைத்துள்ளது.

Source link