மீண்டும் தி.மு.க., ஆட்சி வந்தால் அரசு ஊழியர்கள் சம்பளம் குறையும்; அன்புமணி எச்சரிக்கை

சென்னை: ‘தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ஹிமாச்சல் போல அரசு ஊழியர்களின் சம்பளம் குறையும்’ என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: ஹிமாச்சல பிரதேசத்தில் நிலவும் கடும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி, அம்மாநில அரசு ஊழியர்களுக்கு, 30 சதவீதம் வரையிலும், முதல்வர், அமைச்சர்களுக்கு, 50 சதவீதம் வரையிலும் ஊதியம் தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தின் நிதி மேலாண்மை மிக மோசமாக இருந்தால், என்னென்ன சீரழிவுகள் நேரிடும் என்பதற்கு ஹிமாச்சல் தான் சான்று.

ஹிமாச்சலை ஆளும் காங்கிரஸ் அரசு, வருமானத்தை அதிகரிக்க, ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், செலவை மட்டும் அதிகரித்ததன் விளைவுதான் இது. ஹிமாச்சலை விட மோசமான நிலையில் தான், தமிழகத்தின் நிதிநிலை உள்ளது.

அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தையே கடன் வாங்கித்தான், தி.மு.க., அரசு வழங்கி வருகிறது. இதனால், தமிழகத்தின் நேரடிக்கடன் 9 லட்சத்து 52,374 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தி.மு.க.,வே மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்திலும் அரசு ஊழியர்களின் மாத ஊதியத்தை, 30 முதல் 50 சதவீதம் வரை குறைக்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link