முசாபர்நகர்: அதிவேகமாக வந்த பள்ளி பஸ், பைக் மீது மோதி, தந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். காயம் அடைந்த தாய் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் வசித்தவர் மஹிபால்,45. அவரது மனைவி பூனம், 40. இந்த தம்பதிக்கு ராதிகா,12, அபி, 8, என்ற இரு பெண் குழந்தைகள் இருந்தனர்.
நேற்று காலை மஹிபால் குடும்பத்துடன் பைக்கில் சென்றார். ஹைதர்நகர் – ஜலால்பூர் சாலையில் அதிவேகமாக வந்த பள்ளி பஸ், பைக்குடன் நேருக்கு நேர் மோதியது. பைக்கில் இருந்த நான்கு பேரும் துாக்கி வீசப்பட்டனர். மஹிபால், அவரது இரு குழந்தைகளும் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த பூனம், அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த திதாவி போலீசார், பஸ் டிரைவர் சுரேந்தரை கைது செய்து, பஸ்சையும் பறிமுதல் செய்தனர். பலியான மூன்று உடல்களும், உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
