தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுடைய பெயர்கள் மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் நான் முதல்வன் திட்டத்துடைய பெயர் மாற்றப்பட்டது மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை கிளப்பியது. திமுகவினர் இது சம்பந்தமாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில் தற்போது கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முதலமைச்சர் காலை உணவு திட்டத்துடைய பெயர் மாற்றப்பட்டுள்ளது.
தவெக ஆட்சி அமைத்ததற்கு பின்பாக நான் முதல்வன் திட்டத்துடைய பெயர் மாற்றப்பட்டது. முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயர் இல்லாத நிலையிலும், அப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது விமர்சனங்களை கிளப்பியது. அதனை தொடர்ந்து பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பிணமான மகளிர் விடியல் பயண திட்டத்தில் இருந்து விடியல் என்ற வார்த்தை நீக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாற்றப்பட்டிருகிறது. இது சம்பந்தமாக அரசியல் வட்டாரத்தில் பல விதமான விவாதங்கள் கிளம்பியுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் பெயர் மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலை உணவு திட்டம் என்று பெயர் வைக்கவில்லை. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்று தான் பெயர் வைத்தார்.
தன்னுடைய பெயரை முதல்வர் பிரகடனப்படுத்தவில்லை. ஆனால் தற்போதைய முதல்வர் இன்னமும் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் என்று நினைத்துக் கொண்டு, காமராஜர் பெயரை வைப்பதாக அறிவித்துள்ளார். காமராஜர் பெயரை வைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அதை விரிவுப்படுத்தியவர் எம்ஜிஆர். எனவே மதிய உணவுத்திட்டம் அவர்கள் இருவருக்கும் தான் பொருந்தும்.
காலை உணவுத்திட்டம் முதல்வருடைய திட்டம் என்று தான் சொன்னார். ஸ்டாலினின் காலை உணவுத்திட்டம் என்று சொல்லவில்லை. ஏன் இப்படி மிரண்டு பெயர் வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நாங்கள் முந்தைய அரசின் எந்த திட்டத்தின் பெயரையும் மாற்றவில்லை. அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கும் பைகளில் பெயர் அடித்து வைத்து இருந்தார்கள். அதனை அப்படியே கொடுக்க சொன்னார் மு.க. ஸ்டாலின்.
அதே போன்று அம்மா உணவகம் என்பது அவர்கள் வைத்த பெயர். அதையும் மாற்ற வேண்டாம் என்று சொன்னார். நாங்கள் அந்தளவுக்கு பெருந்தன்மையாக நடந்துக் கொண்டோம். அரசியலுக்கு வந்தவர்களுக்கு அந்த பெருந்தன்மை தேவை. அது இல்லையென இவர்கள் நிரூபித்து இருக்கிறார்கள் அவ்வளவு தான் என்ற விமர்சனத்தை முன்வைத்தார். இதனையடுத்து ஒவ்வொரு திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருவது சம்பந்தமாக கேள்வி எழுப்பப்பட்டது.
அவர்களால் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த முடியவில்லை. அதனால் ஏற்கனவே இருக்கிற திட்டத்துடைய பெயர்களை மாற்றலாம் என செய்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு பெருமை தரக்கூடிய விஷயம் அல்ல என விமர்சனங்களை முன்வைத்துள்ளார் துரைமுருகன் . முன்னதாக நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்ட போது, முதலமைச்சர் என்றாலே மு.க. ஸ்டாலின் பெயர் தான் நியாபகம் வருகிறது என்று தவெக அரசு மாற்றியுள்ளது என திமுகவினர் விமர்சனங்களை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
