மும்பையின் புதிய பாஜ பெண் மேயராகும் ரிது தாவ்டே; குவியும் வாழ்த்துகள்

மும்பை: மும்பை மாநகராட்சியின் முதல் பாஜ பெண் மேயராகிறார் ரிது தாவ்டே(53). அதற்கான வேட்பு மனுவை அவர் இன்று(பிப்.7) தாக்கல் செய்தார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடந்து முடிந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் பாஜ 89 வார்டுகளிலும், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) 29 வார்டுகளிலும் வென்றது. உத்தவ் தாக்ரேவின் சிவசேனாவுக்கு 65 வார்டுகள் கிடைத்தது. காங்கிரஸ் 24 வார்டுகளில் வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் பாஜவுக்கு மேயர் பதவியை பிடிக்கும் அளவுக்கு பெரும்பான்மை இல்லாததால், சிவசேனா ஆதரவுடன் மேயர் பதவிக்கு போட்டியிடுகிறது. இந்த பதவிக்கு ரிது தாவ்டே என்பவரை வேட்பாளராக பாஜ அறிவித்தது. அவர், இன்று (பிப்.7) முறைப்படி தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

துணை மேயர் பதவியானது. சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு)வுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சிவசேனாவின் சஞ்சய் சாடி பெயர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மும்பை மேயர் தேர்தல் பிப்.11ம் தேதி நடக்க உள்ளது.

போட்டி இருந்தால் தேர்தல் நடக்கும் என்ற போதிலும், பாஜவின் ரிது தாவ்டே புதிய பெண் மேயராக தேர்வு பெறுவார் என்று தெரிகிறது. நாட்டின் மிக பணக்கார மாநகராட்சியாக கருதப்படும் மும்பை மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க வேண்டும் என்ற பாஜ எண்ணம், ரிது தாவ்டே மூலம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கு பின்னர், சிவசேனா அல்லாத ஒருவர் மும்பை மேயராக இருக்கிறார். அவருக்கு பாஜ மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த ரிது தாவ்டே?

மும்பை பாஜ மேயர் பதவி வேட்பாளர் ரிது தாவ்டே, 2012ம் ஆண்டு வார்டு எண் 127ல் வென்று அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். அதன் பின்னர், 2017ம் ஆண்டில் 121 வார்டிலும், தற்போது முடிந்த தேர்தலில் 132 வார்டிலும் வென்றவர். மண்ணின் மைந்தரான அவர், மும்பை மாநகராட்சியின் கல்விக் கமிட்டி தலைவராகவும் பதவி வகித்த அனுபவம் பெற்றவர்.

Source link