மும்பை: இந்தியாவில் ஒரு குடும்பத்தில் 3 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டால், அந்த விருதின் மதிப்பு உயரும். இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நமக்கு எந்த வகையிலும் இழப்பை ஏற்படுத்தாது. தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் சித்தாந்தக் கொள்கைகளின் மீதான அர்ப்பணிப்பினாலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பு நல்ல நிலைக்கு வந்து இருக்கிறது.
பொது சிவில் சட்டம் அனைவரையும் நம்பிக்கையை எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட வேண்டும்; அது கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கக் கூடாது. பாரதத்தை மதமாற்றம் மூலம் சிதைக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். திருமணம் என்பது சமூகக் கடமை ஆகும். குடும்பத்தில், 3 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும். சமூகத்தைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
ஊடுருவல்காரர்களை அரசு கண்டறியும் முயற்சிகளுக்கு மக்கள் உதவ வேண்டும். மக்கள் அரசின் கண்களாகவும், காதுகளாகவும் இருக்க வேண்டும். உள்ளூர்வாசிகள் சந்தேகத்திற்கிடமான ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும்.
ஆட்சியில் இருப்பவர்கள்தான் அரசை நடத்துகிறார்கள். நாங்கள் திரைக்குப் பின்னால் இருந்து இயக்குவதில்லை. அரசிற்கு எப்போது ஆதரவு தேவைப்பட்டாலும் ஒத்துழைக்க ஆர்எஸ்எஸ் தயாராக இருக்கிறது. தேசத்திற்கான எனது பணி தொடரும். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.
