மும்பை: ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) கேம்ப்பெல் வில்சன் , தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா டாடா நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.இதனைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக கேம்ப்பெல் வில்சன் நியமனம் செய்யப்பட்டார். 2027 ம் ஆண்டுவரை அவரது பதவிக்காலம் உள்ளது.
நியூசிலாந்தை சேர்ந்த இவருக்கு விமானப் போக்குவரத்து துறையில் 30 ஆண்டு அனுபவம் உள்ளது. சிங்கப்பூரில் உள்ள ஸ்கூட் விமான சேவை நிறுவனத்தில் அவர் சிஇஓ ஆக பணியாற்றி உள்ளார்.
கடந்தாண்டு ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 241 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இதனை உறுதி செய்து ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2026 ம் ஆண்டு ஏர் இந்தியாவின் சிஇஓ பதவியில் இருந்து விலகும் முடிவை ஏர் இந்தியா தலைவர் சந்திரசேகரனிடம் கடந்த 2024ம் ஆண்டே கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அதிகார மாற்றத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய சிஇஓ தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. புதிய நபர் தேர்வாகும் வரை அவர் பதவியில் இருப்பார்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
