மும்பை: வளைகுடா நாடுகளுக்குச் செல்ல முடியாமல் துறைமுகத்தில் அழுகும் காய்கறி, பழங்கள்!

ஈரானில் நடந்து வரும் போர் காரணமாக மும்பை துறைமுகத்தில் வெங்காயம், வாழைப்பழம், திராட்சையுடன் 1000 கன்டெய்னர்கள் முடங்கி கிடக்கிறது.

கண்டெய்னர் லாரிகள்

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஈரானில் இருக்கும் ஹார்முஸ் நீர்வழித்தடம் வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல வேண்டும். அந்த வழித்தடத்தை ஈரான் மூடிவிட்டது. தடையை மீறி அந்த வழித்தடத்தில் பயணம் செய்ய முயன்ற 6 கப்பல்களை ஈரான் தாக்கி மூழ்கடித்துள்ளது. இத்தடையால் இந்தியாவும், சீனாவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் விவசாயம் குறைவு என்பதால் உணவு பொருட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படும். ஆனால் இப்போது அமெரிக்காவுக்கு ஆதரவு கொடுத்து வரும் அனைத்து வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால் துபாய், பஹ்ரைன் உட்பட வளைகுடா நாடுகள் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய கப்பல்களுக்கு அனுமதி கொடுக்காமல் இருக்கிறது.

மும்பை: வளைகுடா நாடுகளுக்குச்  செல்ல முடியாமல் துறைமுகத்தில் அழுகும் காய்கறி, பழங்கள்!

இதனால் உலகின் பல நாடுகளில் வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய கன்டெய்னர்கள் துறைமுகங்களில் முடங்கி கிடக்கிறது. இந்தியாவிலும் மும்பை துறைமுகத்தில் 1000 கன்டெய்னர்கள் முடங்கி கிடக்கிறது. நவிமும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்துதான் அதிக அளவில் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது மகாராஷ்டிராவில் திராட்சை மற்றும் மாம்பழ சீசன் ஆகும். இந்த இரண்டு பழங்களும் வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். தற்போது வளைகுடா நாடுகளுக்கு அனுப்புவதற்காக திராட்சை, வாழைப்பழம், வெங்காயம் போன்றவை ஏற்றப்பட்ட கன்டெய்னர்கள் ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் அதனை கப்பல்களில் ஏற்றுவதற்கு அனுமதி கிடைக்காமல் இருக்கிறது.

இதனால் கன்டெனர்கள் துறைமுகத்தில் முடங்கிக் கிடக்கிறது. இது இந்தியப் பழங்கள் மற்றும் காய்கறி ஏற்றுமதியாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் வெங்காயம், திராட்சை, வாழைப்பழம் மற்றும் தர்பூசணி போன்ற அழுகும் பொருட்கள் இருப்பதால் ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில கன்டெய்னர்கள் கப்பல்களில் ஏற்றப்பட்டு கப்பல் புறப்பட்டு செல்ல அனுமதி கிடைக்காமல் காத்து நிற்கின்றன.

மகாராஷ்டிராவில் இருந்து 150 கன்டெய்னர் திராட்சைகள் மும்பை துறைமுகத்தில் இருந்து துபாய் துறைமுகத்திற்கு வந்த பிறகு அவை இறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே போன்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் 200க்கும் மேற்பட்ட வாழைப்பழக் கண்டெய்னர்கள் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் சிக்கித் தவிப்பதால் நிதி நெருக்கடி அதிகரித்து வருவதாகவும் சந்த் ப்ரூட்ஸ் நிறுவனத்தின் பழ ஏற்றுமதியாளர் யூனுஸ் பக்வான் கூறினார். ஏற்றுமதியாளர்கள் ஒரு கண்டெய்னருக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.8,500 தினசரி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், அதே நேரத்தில் அவை குறிப்பிட்ட இடத்திற்கு செல்லாமல் தேங்கிக்கிடக்கிறது என்றும் பக்வான் கூறினார்.

வாழைப்பழ கண்டெய்னர்கள் குவிந்து கிடப்பதாலும் ஏற்றுமதி குறைந்து வருவதாலும் மொத்த விற்பனை விலை கிலோவுக்கு 25 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக சரிந்துள்ளது. போர் காரணமாக விலை மேலும் சரியக்கூடும் என வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.

ஏற்றுமதியாளர்களுக்கு இழப்பு

கண்டெய்னர்களுடன் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், குளிர்சாதனப் பெட்டிகளுக்கான மின்சாரம் மற்றும் பிற செலவுகளுக்காக ஒரு கன்டெய்னருக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.8500 வரை ஏற்றுமதியாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய சரக்குகள் அங்கு செல்ல முடியாததால், அவை உள்நாட்டுச் சந்தைக்குத் திருப்பி விடப்படுகின்றன. இதனால் உள்ளூர் சந்தையில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை சரிந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. ரம்சான் பண்டிகையையொட்டி வளைகுடா நாடுகளில் நிலவும் அதிக தேவையை இந்தியாவால் பூர்த்தி செய்ய முடியவில்லை. மேலும், வரவிருக்கும் அல்போன்சா மாம்பழ சீசனும் இப்போரால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.  

Source link