லண்டன்:லண்டனின் ரீஜென்ட் தெருவில் அமைந்துள்ள, பிரிட்டனின் மிகப்பழமையான மற்றும் புகழ்பெற்ற இந்திய ஹோட்டலான வீராசுவாமி மூடப்படுவதைத் தடுக்கக் கோரி, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மனு கொண்டு செல்லப்பட்டது.
1926-ஆம் ஆண்டு எட்வர்ட் பால்மரால் தொடங்கப்பட்ட இந்த ஹோட்டல், வரும் மார்ச் 2026-இல் தனது 100-வது ஆண்டைக் கொண்டாட உள்ளது. இது மிச்செலின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரு உயர்தர உணவகமாகும்.
இந்த நிலையில் இந்த ஹோட்டல் அமைந்துள்ள கட்டிடத்தின் உரிமையாளரான கிரவுன் எஸ்டேட் , கட்டிடத்தைப் புதுப்பிக்கத் திட்டமிட்டுள்ளதால், உணவகத்தின் குத்தகையை புதுப்பிக்க மறுத்துவிட்டார்.
அதனை தொடர்ந்து 20,000-க்கும் அதிகமான கையெழுத்துக்கள் அடங்கிய இந்த மனு, மன்னர் மூன்றாம் சார்லஸ் தலையிட்டு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கோருகிறது. மனுவின் நகல் கிரவுன் எஸ்டேட்டின் அருகிலுள்ள அலுவலகத்திற்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தின் உரிமையாளர், மற்றும் பிரிட்டிஷ் மன்னரின் சொத்து இலாகா மேலாளர்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
ரெய்மண்ட் பிளாங்க் மற்றும் மிஷெல் ரூக்ஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற சமையல் கலைஞர்கள் இந்த உணவகத்தைக் காப்பாற்ற ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த குத்தகை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஜூன் 2026 வரை உணவகம் தொடர்ந்து இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
