மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து இந்த அணைகளில் நீர் திறப்பு அதிகரித்தும், குறைந்தும் திறந்து விடப்படுகிறது.

தமிழகம்-கர்நாடக எல்லையான பிலிகுண்டு வழியாக இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருகிறது. கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கன அடிக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு 242 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1,017 கன அடியாக உயர்ந்தது.

இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 1,127 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட திறந்து விடப்படும் தண்ணீர் அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. நேற்று 82.14 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 82.09 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 44.07 டி.எம்.சி.யாக உள்ளது.

Source link