டெஹ்ரான்: ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதையடுத்து, ஈரான் நடத்தி வரும் பதில் தாக்குதல்களால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் இஸ்ரேல் நாடுகளின் முக்கிய நகரங்கள் எங்கும் அபாய சங்கொலி ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
மேற்காசிய நாடான ஈரான் மீது கடந்த, பிப்., 28ல் அமெரிக்கா – இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, ஈரான், மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ படை தளங்களையும், இஸ்ரேலையும் குறி வைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மூன்றாம் நாளான இன்றும் தாக்குதல்கள் தொடர்ந்தன. இதையடுத்து மேற்காசிய நாடுகளிலும், இஸ்ரேலிலும் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையம், அபுதாபி விமான நிலையங்களை இலக்காக வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், அபுதாபியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கத்தாரில் இன்று ஒரே நாளில் 65 ஏவுகணைகள் மற்றும் 12 ட்ரோன்களை ஈரான் ஏவியுள்ளது. இதில் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைனின் மனாமா விமான நிலையம், -குவைத்தில் உள்ள அமெரிக்க துாதரகம் உள்ளிட்ட இடங்களிலும் ட்ரோன் தாக்குதல்கள் நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதல் இடைமறிக்கப்பட்டதுடன், தாக்குதல் குறித்து டெல் அவிவ் நகரம் முழுதும் அபாய ஒலி ஒலிக்க விடப்பட்டது. இருப்பினும், பெய்ட் ஷேமேக் போன்ற குடியிருப்பு பகுதிகளில் விழுந்த ஏவுகணைகளால் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேலில் இதுவரை 11பேர் உயிரிழந்துள்ளதாகவும், 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று, ஈராக்கின் எர்பில் விமான நிலையம் மற்றும் அங்குள்ள அமெரிக்க துாதரகத்தை குறி வைத்தும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால், வான் பாதுகாப்பு அமைப்பின் வாயிலாக அவை இடைமறித்து அழிக்கப்பட்டன.
ஈரானின் இத்தாக்குதல்களை அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி, கத்தார், குவைத், பஹ்ரைன், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து கடுமையாக கண்டித்துள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரானில் உள்ள தன் துாதரகத்தை மூடியதுடன், துாதரையும் திரும்பப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இனி அமெரிக்காவுடன் பேச்சு நடத்த போவதில்லை என ஈரான் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி தெரிவித்துள்ளார். ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை, மேற்காசியா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில், 3 அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக அறிவித்துள்ளது.
