— நமது சிறப்பு நிருபர் -:
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம், வருங்காலத்தில் ஆயுத விற்பனையை அதிகரிக்கப் போகிறது. அப்போது, லாபத்தில் மிதக்கப் போவது அமெரிக்க நிறுவனங்களாகவே இருக்கும் என, தகவல் வெளியாகி உள்ளது. மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து பிப்., 28ல் நடத்திய அதிரடி தாக்குதல், ஒட்டுமொத்த உலகையும் போர் சூழலுக்குள் தள்ளி இருக்கிறது.
ஈரான் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து தீவிரமடைந்த சண்டை, எல்லை மோதலாக நின்று விடாமல், ஆட்சி மாற்றத்தை வித்திடும் முனைப்பிற்கு மாறி உள்ளது.
இஸ்ரேலை மட்டும் குறிவைக்காமல், ராணுவ தளங்கள் அமைக்க அமெரிக்காவுக்கு இடம் கொடுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஈராக் என அண்டை நாடுகளின் மீதும் ஏவுகணைகளால் துளைத் தெடுத்து வருகிறது ஈரான்.
ஏவுகணை
இதனால், இந்த போர் மேற்காசியாவை கடந்து, ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையிலான போர் எப்போது முடியும்; வெற்றி பெறப்போவது யார் என்பது கணிக்க முடியாததாக இருக்கிறது.
எனினும், இந்த போரால் ஒருதரப்பு பெரும் லாபத்தை ஈட்டப் போகிறது. குறிப்பாக, உலகளாவிய ராணுவ துறைக்கு பணம் கொட்டப் போகிறது.
லாக்ஹீட் மார்டின், பி.ஏ.இ., சிஸ்டம்ஸ், ஆர்.டி.எக்ஸ் – ரேதியான் போன்ற அமெரிக்க ராணுவ ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது ஆயுத உற்பத்தித் திறனை நான்கு மடங்காக உயர்த்த அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
போர் துவங்கிய ஒருசில நாட்களுக்குள்ளாகவே மேற்காசிய நாடுகளும், அமெரிக்கப் படைகளும், 1,000க்கும் மேற்பட்ட, ‘பேட்ரியாட்’ ஏவுகணைகளை பயன்படுத்தின. தற்போது அதன் தேவை அதிகரித்து இருப்பதால், அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் விண்ணை தொட்டுள்ளன.
இந்த சூழலில், உலகளாவிய ஆயுத சந்தை பற்றிய அறிக்கையை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது.
அந்த அறிக்கை, நம் நாட்டின் நிலையை துல்லியமாக படம்பிடித்து காட்டுகிறது. உலகளவில், ஆயுத இறக்குமதியில் உக்ரைனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் நம் நாடு இருக்கிறது.
நம் நாடு, ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவை சார்ந்திருப்பதை கடந்த 10 ஆண்டுகளில் வெகுவாக குறைத்துள்ளது. குறிப்பாக, 2011 – 15 கால கட்டத்தில் ரஷ்யாவிடம் இருந்து, 70 சதவீத ஆயுதங்களை இறக்குமதி செய்தோம்.
முன்னுரிமை
அதுவே, 2021 – 25 கால கட்டத்தில், 40 சதவீதமாக சரிந்தது. நவீன ஆயுதங்களை பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் வாங்குவதை நம் நாடு அதிகப்படுத்தியதே இதற்கு காரணம்.
நம் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாக்., உடனான எல்லை பிரச்னைகளால், ஆயுதங்களை அதிகளவு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
ஆயுத உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும் என்ற முனைப்புடன் நாம் ஒருபுறம் முன்னேறினாலும், உலகளாவிய வினியோக தொடரில் ஏற்படும் பாதிப்புகள், நம் நாட்டை நிச்சயம் வெகுவாக பாதிக்கும் என, ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கிறது.
சரி, தற்போதைய சூழலுக்கு வருவோம். ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா மோதலால் ஏற்பட்டிருக்கும் ஒருவிதமான பதற்றமும் நெருக்கடியும், அதிநவீன ஆயுத தேவைக்கு அமெரிக்கா பக்கமே மீண்டும் ஒருமுறை சாய வேண்டும் என்ற ஆர்வத்தை மேற்காசிய நாடுகள் மத்தியில் துாண்டி விட்டுள்ளது.
எனவே, போர் முடிவுக்கு வரும் போது, புனரமைப்பு பணிகள் மற்றும் ஆயுத ஒப்பந்தங்களில் அமெரிக்க நிறுவனங்களுக்கே முன்னுரிமை கிடைக்கும். இதனால், அந்நிறுவனங்களுக்கு லாபம் கொட்டப் போகிறது என, ராணுவ ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.
