சென்னை: சட்டசபை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 7,400க்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச் 30ம் தேதி துவங்கியது. அரசு விடுமுறை நாட்கள் போக, நேற்றுடன் சேர்த்து 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் நடந்துள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட, முதல் 3 நாட்களில் 3,430 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனுக்கள் தாக்கலுக்கு நேற்று கடைசி நாள் என்பதால் களைகட்டியது. திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட சுயேட்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன், சிவசங்கர், ரகுபதி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம், சட்டசபை தேர்தலுக்கான போட்டியில் 7,400க்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். சென்னையில் மட்டும் 16 தொகுதிகளில் 628 மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்க உள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
