மதுரை: பிரதமர் மோடி, அமித்ஷா பிரசார வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிடுவார்களா என ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் பூமிநாதனை ஆதரித்து பிரசாரம் செய்த ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது: மோடியும், அமித்ஷாவும் தமிழகத்திற்கு எத்தனை முறை வந்தாலும் எத்தனை தொகுதிகளில் பிரசாரம் செய்தாலும் ஜெயிக்கப் போவதில்லை. ஆணவ சொற்களாக உதிர்த்து கொண்டிருக்கும் அமித்ஷா, படை பலத்தோடு வந்தாலும் வெல்ல முடியாது.
மதுரை தெற்கு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ம.தி.மு.க., வேட்பாளர் பூமிநாதன் 30ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். முதல்வர் ஸ்டாலின் சென்ற காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர், தவறில்லை. 24 மணி நேரத்திற்குள் 2வது முறை நிறுத்தி சோதனையிட்டனர். பிரதமர் மோடி, அமித்ஷா விமானத்தில் வரும் போது எத்தனை ஆயிரம் கோடி ரூபாயுடன் வருகின்றனர் என்பது யாருக்காவது தெரியுமா.
அவர்களது பிரசார வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிடுவார்களா. அமித்ஷா விருப்பப்படி, அவருக்கு பக்கபலமாக இருக்கக்கூடிய தேர்தல் நடத்தும் அமைப்பு தருகின்ற ஊக்கம், தைரியத்தில் தான் முதல்வர் ஸ்டாலின் காரை மட்டும் சோதனையிடுகின்றனர் என்றார்.
