வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
அரசியல், தேர்தல், வாக்குப்பதிவு என்ற சொற்களை பள்ளிக்கூடம் சென்று படிக்கும் முன்பு 5 வயதிலேயே அறிமுகப் படலம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது எனக்கு. என் மூத்த சகோதரி, சகோதரர்கள் மற்றும் அவர்களின் அக்கம் பக்கத் தோழர்களின் பேச்சை வாய்ப்பிளந்து கதைகளாகக் கேட்டுக் கொண்டிருந்த என் வீட்டில் ரஷ்ய நாட்டின் லெனின், காரல் மார்க்ஸ் போட்டோ இருந்தது. காரணம் என் வீட்டினருகில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் இருந்ததே!

அப்பாவோ எம்.ஜி.ஆரின் பரமபக்தர். தீவிர விசிறி என்று கூட சொல்லலாம். எம்.ஜி.ஆர் மறைந்த பின்பும் இரட்டை இலையை அவர் மறக்கவில்லை. தேர்தல் சமயத்தில் செய்தித்தாள்களில் வரும் அனைத்து கட்சிகளின் பெயர் மற்றும் சின்னங்களைப் படிக்கும் போது தலைசுற்றும். இத்தனை கட்சிகள் உண்டா என. குட்டி யானை என்று அழைக்கப்படும் டெம்போவில், பிளஷர் கார் என்று அழைக்கப்படும் அம்பாசிடரில் ஓட்டு போட வீதி மக்கள், வீட்டினர் சென்று வந்ததை வேடிக்கைப் பார்த்த எனக்கு ஏக்கம் வரும் எப்பொழுது என் விரலில் மை பூசப்படும் என..
முதல் ஓட்டு
முதல் வாக்காளர் அட்டை திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு கிடைத்தது. முடிவாக என் விரலிலும் தேர்தல் மை பூசிக்கொண்டு ரசித்தபடி வெளிவந்தேன். நாங்கள் வசித்தது விருத்தாச்சலத்தின் அருகில் வேறு ஊரில். விஜயகாந்தின் கட்சித் தொண்டர்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என ரகசியமாக கேட்டனர். சிரித்துக்கொண்டே நகர்ந்தேன். (அந்த தேர்தலில் விஜயகாந்த் அவர்கள் அந்த பகுதியில் போட்டியிட்டு ஜெயித்தார்).
பிறகு இதுவரை எந்த தேர்தலிலும் வாக்களிக்கும் வாய்ப்பு வந்ததில்லை கணவரின் தனியார் வேலை நிமித்தமாக பல மாநிலங்களில் மாறி மாறி வசித்து வருவதால் ஊருக்கு வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது. ஆனாலும் ஊர் திருவிழா போல் தேர்தல் விழா வரும்போதும் அரசியல் கட்சிகளின் ஆரவாரம், பேச்சுக்கள், கூட்டங்கள், சண்டைகள், வசவுகள்,வெற்றி பெற்றவரின் ஓட்டு எண்ணிக்கை என எதையும் விடுவதில்லை.

நமது இந்திய அரசாங்கம் புது சட்டம் கொண்டு வரலாம் தேர்தல் பணி செல்லும் அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு இருப்பது போல வெளிமாநிலங்களில் தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு ஏதேனும் வழிகள் செய்யலாம். தேர்தல் அன்று மட்டுமே விடுமுறை கிடைக்கும். ஆனால் பயணங்கள் ஒரு நாளில் முடிந்து விடுவதில்லை. கணவன், மனைவி இருவரும் ஓட்டுக்காக வருவதெனில் பிள்ளைகள்?? அவர்களையும் அழைத்து வந்தால் செலவு?? இவற்றையெல்லாம் சமாளிப்பது மிக கடினம்.
JEE, NEET, UPSC போன்ற பல தேர்வுகள் எப்படி எல்லா இடங்களிலும் ஏற்பாடு செய்கிறார்களோ அல்லது ஆன்லைன் எக்ஸாம் போல ஆன்லைன் ஓட்டும் ஆரம்பிக்கப்பட்டால் எல்லோருக்கும் ஓட்டு போட வாய்ப்பு கிடைக்கலாம். இன்றைய டிஜிட்டல் வேல்டில் எதுவும் சாத்தியமே!

என் பார்வையில் தேர்தல்
-
யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை விட யாருக்கு போடக்கூடாது என்பதில் கவனம் வேண்டும் .
-
மக்களுக்கு அடிப்படை வசதிகளை அளிக்காதவர்களுக்கு NO VOTE
-
அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துபவர்களே உண்மையான மக்கள் தொண்டன்.
-
பொதுக் கழிப்பறையை சரியாக பராமரிக்காத ஊரில் அதன் பொறுப்பை கவுன்சிலர் எம்.எல்.ஏ, எம்.பி என அந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
-
மீன் சமைத்துக் கொடுப்பதை விட மீன்பிடிக்க கற்றுக் கொடுப்பதே சிறந்த உதவி. இலவச அறிவிப்பை நிராகரிக்க வேண்டும்.
-
மேடை நாகரிகம் அறியாமல் இரட்டை அர்த்த வசனம், கெட்ட வார்த்தைகள் பேசுபவருக்கு – NO VOTE
-
என் ஜாதி, என் மதம் என சொல்லி இந்தியர்கள் என்பதை மறக்க செய்யும் நபர்களுக்கு – NO VOTE
-
பெண்கள், குழந்தைகளை சீரழிக்கும் நபர்கள் அல்லது கொலை, கொள்ளை என ஈடுபடுபவர்கள் இருக்கும் கட்சி அல்லது அவர்களை ஆதரிக்கும் நபர்களுக்கு – NO VOTE
-
அடிப்படைக் கல்வி மற்றும் நாகரீகம் இல்லாத வேட்பாளருக்கு – NO VOTE
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – **@*****an.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
