ரகசிய கேமராக்கள் வாயிலாக டில்லியை கண்காணித்த 11 பேர் கைது!

புதுடில்லி: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஆதரவுடன், நம் நாட்டின் ராணுவ நடவடிக்கைகளை கேமராக்கள் வாயிலாக பதிவு செய்து அனுப்பிய கும்பலைச் சேர்ந்த 11 பேரை, டில்லி மற்றும் பஞ்சாப் போலீசார் நேற்று கைது செய்தனர்.

நம் நாட்டில் உள்ள முக்கிய இடங்கள், ராணுவ தளங்கள் உள்ளிட்டவற்றை படம்பிடித்து வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும் கும்பல் குறித்து, டில்லி போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. இதையடுத்து, டில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் சிறப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், உளவு கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து சூரிய சக்தியில் இயங்கும் ஒன்பது ‘சிசிடிவி’ கேமராக்கள், நான்கு கை துப்பாக்கிகள் மற்றும் 24 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணை

இதற்கிடையே, ராணுவ புலனாய்வு அமைப்பு அளித்த புகாரின்பேரில், உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து பேர் அடங்கிய கும்பலை பஞ்சாப் போலீசார் நேற்று கைது செய்தனர். பஞ்சாபில் உள்ள கபூர் தலா, ஜலந்தர், பதான்கோட், பாட்டியாலா மற்றும் மோகாவில் உள்ள ராணுவ தளங்களை ரகசிய கேமராக்கள் வாயிலாக கண்காணித்தது தெரியவந்ததை அடுத்து, இந்த கும்பல் கைது செய்யப்பட்டது.

ஹரியானாவில் உள்ள அம்பாலா, ஜம்மு – காஷ்மீரில் உள்ள கதுவா, ராஜஸ்தானில் உள்ள பிகானேர் மற்றும் அல்வார் ஆகிய பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களையும் இவர்கள் நோட்டமிட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 11 பேரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதும், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஆதரவுடன் இயங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து, டில்லி போலீசார் கூறியதாவது: நம் நாட்டில் உள்ள ராணுவ தளங்கள், எல்லையோர ராணுவ முகாம்கள் ஆகியவற்றை படம்பிடிக்க, பல இடங்களில் இந்த கும்பல் சூரியசக்தியில் இயங்கும் சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளது. ராணுவத்தினரின் செயல்பாடுகள், நடமாட்டம் போன்றவை ரகசிய கேமராக்கள் வாயிலாக படம்பிடிக்கப்பட்டுள்ளன.

போலி அடையாளத்துடன் பெறப்பட்ட, ‘சிம் கார்டு’ பொருத்தப்பட்ட இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள், மொபைல் போன் செயலி வாயிலாக நேரடி யாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தாக்குதல்

இதன் வாயிலாக, பாகிஸ் தான் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்தபடியே, நம் ராணுவத்தினரின் நடமாட்டத்தை நேரடியாக கண்காணித்துள்ளனர். இந்த பயங்கரவாத செயலுக்கு மூளையாக பஞ்சாபைச் சேர்ந்த மன்பிரீத் சிங் செயல்பட்டதுடன், பாகிஸ்தானைச் சேர்ந்த நபர்களுடன் தொடர்பிலும் இருந்துள்ளார்.

கேமராவில் பதிவான இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தவும் பாக்., உளவு அமைப்பினர் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில், மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

உத்தர பிரதேசத்தின் காஜியாபாதைச் சேர்ந்த உளவு கும்பல் ஒன்று, நாட்டின் முக்கிய பகுதிகளை படம்பிடித்த விவகாரத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சைபர் மோசடிக்கு உதவிய இருவர் டில்லியில் கைது

தேசிய சைபர் குற்றப் புகார் இணையதளத்தில் பல்வேறு புகார்கள் தினமும் பதிவாகின்றன. இதில், சந்தேகத்துக்குரிய டெலிகாம் அழைப்பு முறைகள் கண்டறியப்பட்டன. ஒரே இடத்தில் இருந்து அதிக அளவில் வெளிநாட்டு அழைப்புகள் உள்ளூர் எண்களுக்கு மாறி சென்றன.
இந்த சந்தேகத்துக்குரிய தரவுகளை டில்லி சைபர் குற்ற சிறப்பு உளவு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், டில்லி ஜி.டி., காலனியில் உள்ள ஒரு வீட்டில் சிம் பாக்ஸ் செயல்பாடு இருப்பது தெரியவந்தது.
அங்கு ரெய்டு நடத்திய போது, சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றும், ‘சிம் பாக்ஸ்’ 350க்கும் மேற்பட்ட, ‘சிம் கார்டு’கள், மொபைல் போன்கள், லேப்டாப் மற்றும் நெட்வொர்க் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கு ற்ற செயலில் ஈடுபட்ட வைபவ் ராஜ், 29, அனில் குமார், 28, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், தென் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து செயல்படும் சைபர் மோசடி கும்பல்களுக்காக இவர்கள் பணியாற்றியது தெரிந்தது. அவர்களுக்காக சிம் பாக்ஸ் மற்றும் சிம் கார்டு களை வாங்கி பராமரித்தது, மோசடி மூலம் கிடைத்த பணத்தை மறைக்க பிறரது பெயரில் போலி வங்கி கணக்குகள் தொடங்குவது போன்ற வசதிகளை செய்து தந்துள்ளனர்.
இவற்றை பயன்படுத்தி கம்போடியா கும்பல் போலீஸ், சி.பி.ஐ., சுங்கத்துறை அதிகாரிகளாக நடித்து, டிஜிட்டல் கைது என்ற பெயரில் பலரிடம் பணம் பறித்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Source link