ஜெருசலேம்: ஈரானுடன் போர் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் அரசு, நாட்டின் பதுங்கும் இடங்களில் உள்ள திருமணம் ஆகாத ஆண், பெண் பற்றி தகவல் வழங்கும் ‘பாம் ஷெல்டர் டேட்டிங்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல், அமெரிக்காவுடன் இணைந்து, மற்றொரு மேற்காசிய நாடான ஈரான் மீது வான் வழி தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரான், இஸ்ரேல் நகரங்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
ஏவுகணை தாக்குதல்களில் இருந்து காத்துக்கொள்ள மக்கள் பதுங்கும் இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் வணிக வளாகங்கள், பெரிய அலுவலக கட்டடங்கள் ஆகியவற்றின் கீழ் இதுபோன்ற பாதுகாப்பான அறைகள் உள்ளன.
இதை பயன்படுத்துவோருக்கு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், பதுங்கும் இடங்களில் வசிக்கும் மக்களுக்கு தகவல்கள் அளிப்பதற்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதில் ‘பாம் ஷெல்டர் டேட்டிங்’ செயலியும் உள்ளது. தாக்குதல் எச்சரிக்கையின் போது மக்கள் பதுங்கும் பாதுகாப்பு அறைகளில் திருமணமாகதவர்கள் யார் உள்ளனர் என்பதை இந்த செயலி காட்டும் என கூறப்பட்டுள்ளது.
இதற்காக, அந்த பாதுகாப்பு அறையின் நுழைவாயிலில் ஒரு க்யூ.ஆர்., குறியீடு வைக்கப்படும். அதை செயலி மூலம் ஸ்கேன் செய்யும் நபர்கள், அதே இடத்தில் உள்ள மற்ற திருமணமாகாத சிங்கிள் நபர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
